சென்னைக் கட்டிட விபத்து: கடனை தள்ளுபடி செய்ய இடிந்த கட்டிடத்தில் வீடு வாங்கியவர்கள் கோரிக்கை
சென்னை: சென்னையில் 61 ஊழியர்களின் உயிரைக் குடித்த இடிந்த கட்டிடத்தில் வீடு வாங்கியவர்கள் புதிதாக சங்கமொன்றை அமைத்துள்ளனர். மேலும், கட்டிடம் வாங்குவதற்காக தாங்கள் வங்கியில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் கடந்த மாதம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. இதில், அங்கு தங்கியிருந்த கட்டிட ஊழியர்கள் 61 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அரசு ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இடிந்த கட்டிடத்தைக் கட்டியதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அக்கட்டிடத்தில் வீடு வாங்கி உள்ளவர்கள் புதிதாக சங்கம் ஒன்றை அமைத்துள்ளனர். நேற்று மாலை இடிந்த கட்டிடத்தின் அருகில் கூடிய அச்சங்கத்தினர், சாலையில் நின்றவாறு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
இரங்கல்...
எங்களுக்காக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு எங்களின் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
புதிய சங்கம்...
அடுக்குமாடி குடியிருப்பை பணம் கட்டி வாங்கிய நாங்கள், என்ன செய்வதென்று தெரியாமல் தற்போது புதிதாக ஒரு சங்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பை 72 பேர் வாங்கி உள்ளனர். அதில் 53 பேர் இந்த சங்கத்தில் இணைந்து உள்ளனர். மற்றவர்கள் வெளியூர்களில் உள்ளனர். தற்போது 30 பேர் மட்டும் இங்கு வந்துள்ளோம்.
அதிர்ச்சி...
இந்த கட்டிடம் இடிந்து விழுந்த செய்தி கேட்ட உடன் அதிர்ச்சியில் உறைந்து போனோம். உடனே கட்டிட உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் முடியவில்லை. அதற்குள் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விட்டனர்.
நம்பிக்கையில்லை...
ஆனால் மறுநாளே அந்த நிறுவனத்தின் சார்பில், "உங்களின் பணம் திருப்பி கொடுக்கப்படும்" என்று எங்களுக்கு இ-மெயில் அனுப்பினார்கள். ஆனாலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
கடன்...
இந்த அடுக்குமாடி குடியிருப்பை பணம் கட்டி வாங்கிய நாங்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம் என்பதை காட்டவே தற்போது இந்த சங்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். இந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியவர்கள் எல்லாம் தங்களது நிலங்களை விற்றும், வங்கியில் கடன் வாங்கியும்தான் கட்டுமான நிறுவனத்துக்கு பணத்தை கொடுத்து உள்ளோம்.
எப்படி முடியும்...?
இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சத்தில் தொடங்கி ரூ.80 லட்சம் வரையில் உள்ளது. இதில் சிலர் முழுதொகையையும் கட்டிவிட்டனர். சிலர் வங்கியில் கடன் வாங்கி கட்டி உள்ளனர். தற்போது வங்கியில் வாங்கிய கடனுக்கு பணம் கட்ட வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். நாங்கள் ஏற்கனவே கடனில் உள்ளோம். எங்களுக்கு சொந்தமாகாத இந்த கட்டிடத்துக்கு நாங்கள் எப்படி பணம் கட்ட முடியும்.
அரசின் கவனத்திற்கு...
இதனால் நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து உள்ள எங்கள் பணத்தையும் திரும்ப பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை அரசு கவனத்துக்கு வைக்கிறோம்.
கோரிக்கைகள்...
சம்பவம் நடந்த உடனே அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய நாங்கள் வந்து கோரிக்கை வைத்தால் நன்றாக இருக்காது என்று நினைத்துதான் தற்போது எல்லா பணிகளும் முடிந்தவுடன் வந்து உள்ளோம். அரசு ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்துள்ளது. அந்த விசாரணை குழுவில் எங்களது கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மற்றொருக் கட்டிடம்...
இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டிடத்தின் அருகில் மற்றொரு 11 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கட்டிடத்தை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். எனவே, நேற்றைய சந்திப்பில், விபத்துக்குள்ளான கட்டிடத்தில் உள்ள குடியிருப்பை வாங்கியவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள இடியாத கட்டிடத்தில் உள்ள குடியிருப்பை வாங்கி இருந்தவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.