4 வருடத்தில் ரூ. 61 லட்சத்துக்கு தின்று தீர்த்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி கடந்த நான்கு வருட காலத்தில் கவுன்சில் கூட்டங்கள் நடந்த சமயத்தில் பல்வேறு தனியார் ஹோட்டல்களில் உணவு வாங்கிய வகையில் மட்டும் ரூ. 61 லட்சத்தை செலவு செய்துள்ளதாம்.
ஆர்.டி.ஐ மூலம் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இத்தனைக்கும் நாட்டிலேயே மிகவும் மலிவான உணவகமான அம்மா உணவகத்தை சென்னை மாநகராட்சிதான் முதன் முதலில் தொடங்கியது. ஆனால் அந்த மாநாகராட்சியே இப்படி லட்சக்கணக்கில் உறுப்பினர்களின் சாப்பாட்டுக்காக செலவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களை மலிவு விலையில் சாப்பிட வைத்து விட்டு இவர்கள் மட்டும் இப்படி ஆடம்பரமாக சாப்பிட்டிருப்பது நியாயமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
டீக்காசு ரூ. 20.87 லட்சம்
கடந்த 2012ம் ஆண்டு டீ, காலை உணவு, நொறுக்குத் தீனி, மதிய உணவுக்காக ரூ. 9.42 லட்சம் செலவிடப்பட்டது. இது 2013ல் ரூ. 19.77 லட்சமாக உயர்ந்தது. 2014ல் ரூ. 20.87 லட்சமாக எகிறியது.
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ரூ. 1.43 லட்சம் செலவு
2011 அக்டோபர் முதல் 2015 ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 43 கூட்டங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு கூட்டத்திற்கும் சராசரியாக ரூ. 1.43 லட்சம் செலவாகியுள்ளது.
யார் யாரெல்லாம் சாப்பிட்டார்கள்
மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார், பத்திரிகையாளர்கள், கவுன்சிலர்கள், அவர்களின் டிரைவர்கள், பி.ஏக்கள் ஆகியோர் சாப்பிட்டவர்களின் பட்டியலில் வருகின்றனர்.
மட்டன் பிரியாணி மஸ்ட் பாஸ்
பல கவுன்சிலர்கள் அசைவ உணவுதான் வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டுள்ளனர். அதிக அளவில் மட்டன் பிரியாணிதான் சாப்பிடப்பட்டுள்ளதாம். பலர் ஸ்டார் ஹோட்டல்களிலிருந்து வாங்கிச் சாப்பிட்டுள்ளனர்.
கேன்டீன் சாப்பாட்டை விரும்புவதில்லை
இதுகுறித்து மூத்த மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பெரும்பாலான கவுன்சிலர்கள் மாநகராட்சி கேன்டீன் சாப்பாட்டை விரும்புவதில்லை. தனியார் ஹோட்டல்களிலிருந்து வாங்கிச் சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். இதனால் பெரும் செலவு ஏற்படுகிறது. சில கவுன்சிலர்கள் வீட்டுக்குப் போய் சாப்பிடுகிறார்கள் என்றார்.
சிட்டிங் அலவன்ஸ்
கூட்டத்திற்கு வந்தால் கவுன்சிலர்களுக்கு சிட்டிங் அலவன்ஸ் என்ற படி வழங்கப்படும். மேலும் போக வர ஆகும் செலவையும் தருவார்கள். அந்த வகையில் இந்த காலகட்டத்தில் 200 கவுன்சிலர்களுக்கும் ரூ. 63.32 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பளம் கிடையாது
மும்பை, பெங்களூரு மாநகராட்சிகளில் கவுன்சிலர்களுக்கு முறையே ரூ. 10,000, ரூ. 7500 என சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு சம்பளம் என்று எதுவும் வழங்கப்படுவதில்லை.
ஆனால் படிகள் உண்டு
இருப்பினும் கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ. 850 படி, சிட்டிங் அலவன்ஸ் ரூ. 800, கன்வேயன்ஸ் ரூ. 50 என வழங்கப்படுகிறத.
சம்பளம் தர வேண்டும்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும். மாதம் ரூ. 25,000 என சம்பளம் தர வேண்டும். எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு சம்பளம் தரும்போது ஏன் கவுன்சிலர்களுக்குத் தரக் கூடாது. நிலையான சம்பளம் கொடுத்தால் கவுன்சிலர்களின் செயல்பாடும் நன்றாக இருக்கும் என்றார்.
இவங்களுக்கு எதுக்கு சம்பளம்
ஆனால் கவுன்சிலர்களுக்கு சம்பளம் தருவதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பெரும்பாலான கவுன்சிலர்கள் கூட்டங்களுக்கு ஸ்கார்ப்பியோ, இன்னோவா என சொகுசு கார்களில்தான் வருகின்றனர். சொத்துக் கணக்கை இவர்கள் காட்டுவதில்லை. இவர்களால் மாநகராட்சிக்கு செலவதானே தவிர எந்த லாபமும் இல்லை என்கிறார்.