எதற்காக இந்த அசாதாரண சூழல்.. குற்றங்களுக்குத் தரப்படும் உச்ச மரியாதையா?
பந்த் நாட்கள் தவிர்த்து இதற்கு முன் எப்போதும் இப்படிப் பார்த்ததில்லை சென்னையை.. சென்னை மக்களை.
தினசரி சென்னை நகருக்குள் சென்று திரும்புவோர், எதற்கு வம்பு என்று வீட்டுக்குள்ளேயே தொலைக்காட்சிப் பெட்டி முன்பு அமர்ந்துவிட்டார்கள். குறிப்பாக கார் போன்ற வாகனங்களை வைத்திருப்போர் வீட்டு வாசலைத் தாண்டவே தயங்கி நின்றுவிட்டனர்.
சந்துக்குச் சந்து அதிமுக கரை வேட்டி கட்டிய கூட்டம் ஒன்று மிரட்டும் தோரணையில் நின்று கொண்டுள்ளது, எப்போதும் பாய்ந்து பிறாண்டத் தயாராக.
நண்பர்கள், தெரிந்தவர்கள் மட்டுமல்ல.. முன் பின் அறியாத இருவர் கடையில் சிறிது நேரம் நிற்க நேர்ந்தால்,
'அப்புறம்... தீர்ப்பு எப்டி இருக்கும்ங்கிறீங்க?'
'தெரியலியே சார்'
'ஒருவேளை இந்தம்மாவுக்கு எதிரா வந்தா, புது முதல்வரா யார் வருவார்?'
'வேற யார்.. ஓபிஎஸ்தான்...'
-இப்படிப் போகிறது உரையாடல்.
திமுகவினர் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல். சம்பந்தமே இல்லாமல், திமுகவினர் சொத்துக்கள் சூறையாடப்பட்ட 1991-ஐ அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாதே!
தீர்ப்பு சில மணி நேரங்கள் தள்ளிப்போய்விட்டதாக தகவல் வெளியானதுமே, 'அப்படீன்னா.. அதுக்குள்ள போய் வேலையை முடிச்சுட்டு வந்துடலாம்' என கிளம்புகின்றனர்.
இது சட்டப்படி இயங்கும் ஜனநாயக நாடுதானே.. ஒரு தனி மனிதரின் வழக்கு இது. இதில் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்பதல்லவா முறை... யார் செய்தாலும் தவறு தவறுதானே... ஆனால் இங்கு பயமல்லவா நிலவுகிறது... அதையும் கூட பெரும்பாலானவர்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதுதான் கொடுமை!
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்றாகிவிட்டது. அறச் சீற்றம் அறுந்து, குற்றங்களை ரசித்து நேசிக்கப் பழகிவிட்டது பெருமளவு கூட்டம்.
பத்திரிகைகளும் மீடியாக்களும் இன்று இந்த வழக்கு பற்றி எழுத காட்டும் பவ்யத்தைப் பார்த்தால் சிரிப்பாய் வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பத்திரிகையாளர்கள் யாரும் இல்லையா!!
குற்றங்களுக்குக் கொடுக்கும் மரியாதையாகத்தான், சென்னையின், தமிழகத்தின் இன்றைய அசாதாரண சூழலைப் பார்க்க வேண்டும்!