மழையாவது, வெள்ளமாவது.. ஏரிகள் பாதி கூட நிரம்பவில்லை.. குடத்தை தூக்கி அலைய ரெடியாகுங்க சென்னை மக்களே!
சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றுவிட்டதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளுக்கான நீர்வரத்து குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது
அதேபோல, சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகியவற்றின் நீர் மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.
உண்மை வேறு
சென்னையில் மழை கொட்டித் தீர்க்கிறது என மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. பிற மாவட்ட மக்களும் சென்னை வரலாறு காணாத மழையை சந்தித்துவிட்டதாக நினைத்தனர். ஆனால் உண்மை நிலை வேறாக உள்ளது.
குடத்துடன் அலைய வேண்டியதுதான்
கடந்த ஒருவாரமாக சென்னைக்கு நீர் வழங்கும் ஏரி பகுதிகளிலும், அதன் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழையில்லை. இதேநிலை நீடித்தால் வரும் ஆண்டு கோடையிலும் இந்த ஆண்டை போலவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நீர் இருப்பு இதுதான்
ஒரு உண்மை தெரியுமா? தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய 4 ஏரிகளிலும் 40% மட்டுமே நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 84 கனஅடி விகிதம் நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறதாம்.
நீர் வரத்து
சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் கிடையாது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 52 கன அடி தண்ணீர் வருகிறது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 80 கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது. மழையில்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களும் வறட்சியை எதிர்நோக்கியுள்ளன.