சென்னை ஓட்டலில் "தண்ணி" அடிக்கும் போட்டி.. ஏபிவிபி கொந்தளிப்பால் கைவிடப்பட்டது!
சென்னை: சென்னை ஓட்டல் ஒன்று அறிவித்த ரூ. 2500 செலுத்தி அளவில்லாமல் மது அருந்தும் போட்டிக்கு பாஜகவின் மாணவர் பிரிவான 'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' (ஏபிவிபி) கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தப் போட்டியை நிறுத்தி விட்டனர்.
சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மது அருந்தும் போட்டி நடத்தப்படுவதாக ஏபிவிபி அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கலாச்சாரத்தைக் கெடுக்கும் இது போன்ற போட்டிகளை நடத்தக் கூடாது என ஓட்டல் முன்பு ஏபிவிபி அமைப்பினர் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த எழும்பூர் போலீசார் மது அருந்தும் போட்டியை நிறுத்தியதைத் தொடர்ந்து ஏபிவிபி அமைப்பினர் கலைந்து சென்றனர்.
அளவில்லா பீர் சலுகை...
இது குறித்து ஓட்டல் நிர்வாகம் கூறுகையில், 'மது குடிக்கும் போட்டி நடத்தவில்லை. ரூ.2,500-க்கு அளவில்லா பீர் குடிக்கும் சலுகையை மட்டுமே அறிவித்திருந்தோம்' எனத் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பு போராட்டங்கள்...
இரவு விருந்து நடக்கும் இடங்களுக்குள் நுழைந்து தாக்கியது, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது, காதலர்களை விரட்டி விரட்டி தாக்கியது என கர்நாடகா மாநிலத்தில் இந்து அமைப்பினரின் போராட்டங்கள் பரபரப்பாக பேசப்பட்டன.
காந்திய வழியில் போராட்டம்...
இந்த நிலையில் சென்னையில் இப்படி ஒரு தலையிடல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஏபிவிபி அமைப்பின் சென்னை மாவட்ட அமைப்பாளர் முத்துராமலிங்கம் அளித்துள்ள பேட்டியில்,
"மது குடிப்பவர்களின் காலில் விழுந்து மது குடிப்பதை விடச்சொல்வது, டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடுவது, மதுவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது என தமிழகத்தில் காந்திய வழியில் மட்டுமே போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
பேச்சுவார்த்தை...
மதுவிற்கு எதிராக நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் எங்கள் அமைப்பின் உறுப்பினர் இமெயில் முகவரிக்கு 'எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் மது குடிக்கும் போட்டி' நடைபெற இருப்பதாக தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு சென்று மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதை தடை செய்தோம்.
ஹேப்பி ஹவர்ஸ்...
அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பலர் மது குடிப்பதில்லை. அந்த நேரத்திலும் விற்பனையை அதிகரிக்க சென்னையில் உள்ள பல ஓட்டல்களில் பகல் நேரங்களில் 'ஹேப்பி ஹவர்ஸ்' என்ற பெயரில் ஒரு பாட்டில் வாங்கினால் மற்றொன்று இலவசம், சைட் டிஷ் இலவசம் என விளம்பரம் செய்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு மது விருந்திற்கும் சில ஓட்டல்கள் ஏற்பாடு செய்துள்ளன. இதுபோல கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து இடங்களையும் கண்டுபிடித்து அவற்றிற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
மது இல்லா தமிழகம்...
புத்தாண்டு கொண்டாட்டத்திலும் மது விருந்து வைத்தால் முற்றுகையிடுவோம். மதுவிற்கு எதிராக செயல்படும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். மது இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்றவரை முயற்சி செய்வோம்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.