கோடி, கோடியா ஒதுக்கியும் எங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை: சென்னைவாசிகள் கவலை
சென்னை: தமிழக அரசு உணவு, போர்வை என்று எதுவும் தர வேண்டாம் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள கழிவுநீர், குப்பைகளை அகற்றினாலே போதும் என்று சென்னை மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத மழையால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள், தன்னார்வலர்கள் உணவு, போர்வை, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்கள்.
வெள்ளம் வடிந்துள்ள நிலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியிருப்பதுடன், குப்பைகளும் சேர்ந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் கூறுகையில்,
வெள்ளத்தில் வீடுகளை இழந்து தெருவில் நிற்கிறோம். அரசு சார்பில் இதுவரை எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சில புண்ணியவான்கள் அளிக்கும் உணவையும் எங்களுக்கு கொடுக்கவிடாமல் ஆளுங்கட்சியினர் தகராறு செய்கிறார்கள்.
சாலைகளில் கூட்டம் சேர்வதாகக் கூறி எங்களை விரட்டியடிக்கிறார்கள். வீடுகளை இழந்துள்ள நாங்கள் எங்கு செல்வோம். எங்கள் குழந்தைகளுக்கு திடீர் என காய்ச்சல் ஏற்படுகிறது. எங்கள் வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.
வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு பலியாகி கிடந்த ஆடு, மாடுகளை நாங்கள் தான் அப்புறப்படுத்தினோம். அரசு எங்களுக்கு உணவு எல்லாம் கொடுக்க வேண்டாம். அதை சில புண்ணியவான்கள் செய்கிறார்கள். கழிவுநீர் மற்றும் குப்பையை அகற்றி இடத்தை சுத்தம் செய்து கொடுத்தாலே போதும்.
ஏதோ கோடி, கோடியா ஒதுக்கியதாக சொல்கிறார்கள். ஆனால் எங்களுக்கு ஒரு பைசா கூட இதுவரை கிடைக்கவில்லை என்றனர்.