திசையெங்கும் வெள்ளக் காடு... மிதக்குது சென்னை... மவுனித்துப் போனதா அரசாங்கம்?
கனமழை எச்சரிக்கை விடுத்தும் தமிழக அரசு செயல்படாமல் போனதால் சென்னை நகரம் வெள்ளக்காடாகி கிடக்கிறது.
Recommended Video
சென்னை: சென்னை மாநகரத்தில் திரும்பிய திசையெங்கும் வெள்ளக்காடுதான்.. வெள்ளத்தால் மிதக்கிறது சென்னை. 2015 வெள்ளகாலத்தை நினைவூட்டும் வகையில் பல அடி உயரத்துக்கு சாலைகளில் மழைநீர் சூழ்ந்து கிடக்கிறது. மழைக்கு முன்னரும் சரி...பின்னரும் சரி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மவுனித்துப் போய் கிடக்கிறது தமிழக அரசு.
வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாகவே இருக்கும் என எச்சரித்துக் கொண்டிருந்தது வானிலை ஆய்வு மையம். இந்திய வானிலை ஆய்வு மையமும் அக்டோபர் 30-ந் தேதி முதல் மழை உக்கிரத்தை காட்டும் என எச்சரித்தது.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கைகளின்படியே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், கடலூர் என பல மாவட்டங்களிலும் மழை இடைவிடாது கொட்டி தீர்த்துவிட்டது. அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ மழை கொட்டியிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரே நாளில் 11.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
வெள்ளநீரால் மிதக்கும் சென்னை
இப்போது சென்னை நகரின் திரும்பிய திசையெங்கும் மழைநீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது. பல அடி உயர தடுப்பு சுவர்களைக் கூட மூழ்கடித்துவிடும் நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
எம்ஜிஆர் விழாவில் பிசி
கனமழை கொட்டும் என எச்சரித்தபோதே போர்க்கால அடிப்படையில் வெள்ள நீர் கால்வாய்களை சீரமைத்து இருக்க வேண்டும். ஆனால் நம்மிடம் இருப்பதோ நமத்துப் போன அரசாங்கம் அல்லவா. எதுவுமே செய்யாமல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் படுபிசியாக இருக்கிறது.
2015 நிலைமைதான்
இப்போது மழையும் வெளுத்து வாங்கி சென்னையை வெள்ள நீரால் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. மழைநீர் அப்படியே நகரின் பிரதான சாலைகளில் தேங்கியிருப்பதால் மக்கள் மீண்டும் 2015ஐ போல நீந்தித்தான் செல்ல வேண்டிய துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்போதும் கூட இந்த அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட்டு மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மவுனித்தே கிடக்கிறது.
அரசு செயல்பட வேண்டும்
இதனிடையே செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஏரிகள் நிரம்பி நீரை திறப்பதற்குள் சென்னை நகரை திணறடித்துக் கொண்டிருக்கும் வெள்ள நீரை வெளியேற்ற வேண்டியது அரசின் உடனடி கடமை. இல்லையெனில் சென்னைவாசிகள் மீண்டும் பெருந்துயரை சந்திக்கும் பேரவலத்தை தவிர்க்க முடியாது என்பதை ஆட்சியாளர் உணர்ந்தாக வேண்டும்!