சென்னையில் குவிந்துள்ள சேறு... கால்களை பதம்பார்க்கும் சேற்றுப்புண்... குணப்படுத்துவது எப்படி?
சென்னை: பெருமழை வெள்ளத்தால் கடந்த ஒருவாரகாலமாக சென்னை நகரின் சாலைகளில் வெள்ளமும், சேறும், சகதியும் குவிந்துள்ளது. உடமைகள் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்கள் வெறும் காலுடன் நடந்து செல்வதால் கால் விரல்களில் சேற்றுப் புண்கள் தாக்கி வருகின்றன. நோய்கிருமிகள் தாக்குவதால் காய்ச்சல், வாந்தி பேதி நோய்களும், அம்மை, அரிப்பு போன்றவையும் சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தாக்கி அச்சுறுத்தி வருகிறது.
சபரிமலை சீசன் காலம் என்பதால் கோவிலுக்கு மாலை போட்டுள்ள பக்தர்கள் பலரும் வெறும் காலில் நடந்து சென்று வருவதால் பெரும்பாலோனோர் சேற்றுப்புண் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சேற்றுப்புண்ணிற்கு மருந்து கேட்டு மருத்துவ முகாம்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தொடர் மழையால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீரில் அதிகமாக நடப்பவர்களுக்கு கால்களில் சேற்றுப்புண், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. சேற்றுப்புண் என்பது மண் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் பாதிப்பு
முதியோர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்தத் தொற்றுக்கு எளிதில் பாதிக்கப்படுவார்கள். இதனால் மழை நேரங்களில் வெளியே சென்று வந்தவுடன் கால், கைகளை நன்றாக கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
மருத்துவரை அணுகுங்கள்
காய்ந்த துண்டை வைத்து துடைத்துவிட்டு கால் விரல்களில் தேங்காய் எண்ணெய் போட வேண்டும். இதன் மூலம் கால்களில் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். தொற்று, சேற்றுப்புண் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பென்சோயிக் ஆசிட் என்ற களிம்பை தடவலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
சித்த மருத்துவத்தில் மருந்து
மழைக் காலங்களில் வெயிலில் உடைகளை உலர்த்த முடியாது எனவே உள்ளாடைகளையும் இஸ்திரி பெட்டியில் தேய்த்து அணிய வேண்டும்.சேற்றுப்புண்ணிற்கு சித்த மருத்துவத்திலும் மருந்து உள்ளது, குப்பைமேனி பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை கலந்து சேற்றுப்புண் பாதிக்கப்பட்ட இடத்தில் போட வேண்டும். இதனை சேற்றுப்புண் பாதிக்காமல் தற்காப்புக்காகவும் பயன்படுத்தலாம்.
வேப்ப எண்ணெய் மருந்து
மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம். அம்மான் பச்சரிசி இலையை வெறுமனே அரைத்துப் பூசலாம். மஞ்சளை நீர்விட்டு அரைத்துப் பூசலாம். வேப்ப எண்ணெயைக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பூசுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். பூஞ்சை, பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீமை அகத்தி இலையுடன் எலுமிச்சைச் சாறு அரைத்து பூச வேண்டும் என்பது சித்த மருத்துவர்களின் அறிவுரையாகும்.