சென்னை சில்க்ஸில் வெடித்து சிதறும் டீசல் பேரல்கள்...10 மணிநேரத்துக்கும் மேலாக பற்றி பரவும் பயங்கர தீ
சென்னை தியாகராய நகரில் 7 மாடி கட்டிடமான தி சென்னை சில்க்சில் 10 மணி நேரத்திற்கும் மேலாக தீ கட்டிடம் முழுமைக்கும் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
சென்னை : சென்னையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக அணைக்கப்படாமல் இருக்கும் தீ விபத்திற்கு வெடித்துச் சிதறும் டீசல் பேரல்களே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் ஷாப்பிங் நகரமான தியாகராய நகரில் என்ன பொருள் வேண்டுமானாலும் உடனே கித்துவிடும். ஆனால் இங்கு இருக்கும் மாட மாளிகைக் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அனைப்பதற்கான வழி மட்டும் தேடினாலும் கிடைக்காது.
இன்று அதிகாலையில் தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
15 தீயணைப்பு வாகனங்கள்
முதலில் 5 தீயணைப்பு வாகனங்கள், பின்னர் 10, இப்போது 15 தீயணைப்பு வாகனங்கள் என தி.நகரில் தீ விபத்து நிகழ்ந்த கட்டிடத்திற்கு முன்னும் பின்னும் தீயணைப்பு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கவைக்கப்பட்டுள்ளன.
எங்கிருந்து பரவுகிறது
ஆனால் தீயை அணைப்பதில் இருக்கும் சிரமத்திற்கு காரணம் தீ எங்கிருந்து பரவுகிறது என்று தெரியவில்லை. கடுமையான புகைமூட்டத்துடன் கட்டிடம் இடிந்து இடிபாடு பொருட்கள் கட்டிடத்திற்குள்ளாகவே விழுவதே காரணம் என்று சொல்லப்படுகிறது.
தரைத்தளத்தில் மின்கசிவு
கடும் புகைமூட்டத்திற்கு மத்தியில் தீ பரவும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தி சென்னை சில்க்ஸ் கட்டிட அடித்தளத்தில் மின்தடைக்கு பயன்படுத்தும் ஜெனரேட்டர்கள் உள்ளன. மின்தடை காலம் என்பதால் சிரமங்களை தவிர்க்க 2 பேரல் டீசலை நிர்வாகத்தினர் ஸ்டாக் வைத்துள்ளனர்.
வெடிக்கும் டீசல் பேரல்கள்
இந்த ஜெனரேட்டர் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெனரேட்டருக்கு அருகிலேயே இருக்கும் டீசல் பேரல்கள் வெடித்து சிதறுவதால் கடையின் அனைத்து தளத்திற்கும் தீ பரவி மளமளவென கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
திணறும் வீரர்கள்
இதனாலேயே அந்தப்பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைக்குள் செல்ல வழி இல்லாததால் தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி தீணை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.