சென்னை: கலவர மாணவர்களை கண்காணிக்க 45 பறக்கும் போலீஸ் படை
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே பேருந்துகளில் ஏற்படும் மோதலை கட்டுப்படுத்தவும், கலவரம் செய்யும் மாணவர்களை கண்காணிக்கவும் 45 பறக்கும் போலீஸ் படை ஏற்படுத்துள்ளது.
சென்னையில் மாணவர்கள் கத்தி, அரிவாள், உருட்டுகட்டை, கற்களால் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. இந்த மோதல் சம்பவங்களில் பஸ் ஊழியர்கள், பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். மாணவர்களின் கலவரத்தை அடக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படைக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமை ஏற்றுள்ளார். 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 போலீசார் ஒவ்வொரு படையிலும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும் பகுதிகளில் தினமும், காலையிலும், மாலையிலும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இந்த கண்காணிப்பு பறக்கும் படை தென் சென்னையில் 15 படைகளும், கிழக்கு சென்னை, வடசென்னை, மேற்கு சென்னையில் தலா 10 படைகள் வீதமும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் இவர்கள் தங்கள் கண்காணிப்பு வேட்டையை தொடங்கி விட்டனர். இந்த பறக்கும் படை போலீசார் தகராறு செய்யும் மாணவர்களை உடனடியாக கைது செய்வார்கள். கலாட்டா செய்யும் மாணவர்களை ரகசியமாக வீடியோ படமும் எடுப்பார்கள்.
பஸ்களில் கல்வீசி சேதம் விளைவித்தாலோ, வேறு பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு செய்தாலோ, யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.