ரயிலில் ரூ. 5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி உத்தரவு
சென்னை: ஓடும் ரயிலில் ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, எழும்பூர் ரயில் நிலைய போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.342 கோடியில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரயில்வே பாதுகாப்பு படையினர் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளை நடந்த ரயிலை தமிழக காவல் துறை தலைவர் அசோக்குமாரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணைளில் 4 பேர் கொண்ட கும்பல் பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும், ரயிலின் மேற்கூரையில் ஒரு நபர் நுழையும் அளவுக்கு துளை போடப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் நடந்து 48 மணி நேரம் ஆகியும் எந்த துப்பும் கிடைக்காத காரணத்தினால், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலைய போலீசாருக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கு, எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை விரிவுப்படுத்த வேண்டியுள்ளதால் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை நடந்த ரயில் பெட்டியை ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் பகத் ஆய்வு மேற்கொண்டார். மேலும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சிபிசிஐடி, ஐஐி மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு செய்தார். ரயிலில் பயணம் செய்த அதிகாரிகளுடனும் விசாரணை நடத்தினார்.