சென்னையில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம் - ஒருவர் பலி
சென்னை: 2014 புத்தாண்டையொட்டி சென்னை மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளில் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மகிழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தின்போது ஒரு இளைஞர் பலியானார்.

சிறப்பு பிரார்த்தனைகள்
புத்தாண்டையொட்டி செவ்வாய் நள்ளிரவில் பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம், மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், சி.எஸ்.ஐ.கதீட்ரல் பேராலயம், பரங்கிமலை புனித தோமையர் பேராலயம், பேட்ரிக் ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், கண்டோன்மன்ட் ஹாரிசன் ஆலயம் உள்ளிட்ட நகரின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சிறப்பு பிரார்த்தனைக்கு பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும், இனிப்புகளையும் பரிமாறிக் கொண்டனர்.
ஓட்டல்களில் கொண்டாட்டம்...
சென்னையில் உள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்,கிளப்புகளில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், விருந்து ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் தொடங்கிய புத்தாண்டு நிகழ்ச்சிகள் புதன்கிழமை விடியும் வரை நடைபெற்றன. இரவு 1 மணி வரைதான் அனுமதி என போலீஸ் கூறியிருந்தபோதும், விடிகாலை வரையில் விருந்துகளும் கேளிக்கைகளும் தொடர்ந்தன. கட்டணமாக பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது இந்த ஓட்டல்களில்.
முன்னணி நட்சத்திரங்கள்...
ஓட்டல் ஹயாத்தில் பிரபல பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா நடனமாடினார். இந்த நிகழ்ச்சிக்கு ரூ 8000 வரை கட்டணம் வசூலித்தனர்.
கடற்கரைகளில்
வழக்கம்போல மெரீனா, எலியட்ஸ் கடற்கரையில் பொதுமக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினர். மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன்புள்ள மணிக்கூண்டு அருகே திரண்ட சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக உற்சாக ஆரவாரம் செய்தனர். வாணவேடிக்கைகளும், பட்டாசுகளையும் வெடித்தனர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆரவாரத்துடன் புத்தாண்டு பிறந்ததைக் கொண்டாடினர். இரு கடற்கரையிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கிழக்கு கடற்கரைச் சாலையில்
இந்த ஆண்டும் சென்னை தொடங்கி மாமல்லபுரம் வரையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளைஞர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் அமர்க்களமாக இருந்தது. இந்த சாலையில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் மது விருந்து - நடனம் என உற்சாகத்துக்கு பஞ்சமில்லை.
இதுவரை இல்லாத அளவு
சென்னையில் உள்ள ஸ்டார், நான் - ஸ்டார் ஓட்டல்கள் அனைத்துமே சிறப்பு மது விருந்து கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தன. தெருக்கள், சாலைகளில் இதுவரை இல்லாத உற்சாகத்துடன் பட்டாசு வெடித்தும், நடனமாடியும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் வெளிப்படையாகவே மக்கள் மது அருந்திக் கொண்டிருந்ததை காவலர்கள் கண்டும் காணாமல் போய்விட்டதும் நடந்தது.
போலீஸ் பாதுகாப்பு
யாரையும் நள்ளிரவில் கடலில் இறங்கி குளிக்க விடவில்லை. அசம்பாவித சம்பவங்களை தடுககும் விதமாக, இரவு ரோந்துப் பணியில் வழக்கத்தை விட கூடுதலாக 3 ஆயிரம் காவலர்கள் ஈடுப்படுத்தப்பட்டனர். நகரின் முக்கியமான சாலை சந்திப்புகளில் தீவிர வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டனர்.
இளைஞர் பலி
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள எலியட்ஸ் கடற்கரைக்கு சென்ற இளைஞர் ஒருவர் காந்தி மண்டபம் அருகே நேர்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மது அருந்திவிட்டு இளைஞர்கள் அதிவேகமாகப் பறந்து சில இடங்களில் விபத்துக்களில் சிக்கினர்.












Click it and Unblock the Notifications