நெல்லையில் சோகம்: மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாத குழந்தை பலி
மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை உயிரிழந்தது.
நெல்லை: நெல்லையில் மேற்கூரை இடிந்துவிழுந்ததில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
நெல்லை தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பு சாலை பகுதியை சேர்ந்த தம்பதி விக்னேஷ்-சிவகாமிதேவி. இவர்களுக்கு அருணா அர்ஷிகா என்ற 4 மாத கைக்குழந்தை உள்ளது.

நெல்லை பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வந்ததில் இவர்களது வீட்டின் மேற்கூரை தண்ணீரில் முற்றிலுமாக ஊறி பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால் இதை அவர்கள் கவனிக்கவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலையும் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, கணவன், மனைவி இருவரும் கட்டிலில் தூங்கி கொண்டிருக்க, அருகில் குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று மேற்கூரையில் தொட்டிலில் கட்டியிருந்த இடம் மட்டும் பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் தொட்டிலில் தூங்கிய குழந்தை கீழே விழுந்தது. அத்துடன், கட்டிட இடிபாடுகள் அனைத்தும் அந்த குழந்தையின் மேல் விழுந்தது.
சத்தம் கேட்டு விழித்த விக்னேசும், அவரது மனைவியும் அலறியடித்துக் கொண்டு இடிபாடுகளின் அடியில் சிக்கிக் கொண்ட குழந்தையை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது. அந்த பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications