மலைக்கு திரும்பிய கள்ளழகருக்கு அதிர்வேட்டு முழங்க வரவேற்பு - சித்திரை திருவிழா நிறைவு
மதுரை: மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர், 5 நாட்களுக்குப் பின்னர் அழகர்கோவிலுக்கு செவ்வாய்கிழமையன்று திரும்பினார். அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகருக்கு வரவேற்பு கொடுத்த பக்தர்கள் 18 திருஷ்டி பூசணிக்காய்களை சுற்றி உடைத்து கோயிலுக்குள் அழைத்துச்சென்றனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தங்கக்குதிரை வாகனத்தில் மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் 22ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு கடந்த 20 ஆம் தேதி புறப்பட்டார். 21ம் தேதியன்று மதுரை எல்லையான மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்கொண்டு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடைபெற்றது.
வைகையில் கள்ளழகர்
22ம் தேதி காலை 6 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையில் எழுந்தருளினார். வண்டியூர் வீரராகப்பெருமாள் கோயிலில் இரவு தங்கி 23ம் தேதி தேனூர் மண்டபத்துக்கு சேஷவாகனத்தில் எழுந்தருளி மண்டுக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.
பூப்பல்லக்கில் திரும்பினார்
ராமராயர் மண்டபத்தில் தசாவாதாரத்தில் பக்தர்களுக்கு காட்சிதந்த கள்ளழகர், தல்லாகுளத்திலிருந்து பூப்பல்லக்கில் 25ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை மதுரையிலிருந்து மலைக்கு புறப்பட்டார். இரவு அப்பன்திருப்பதியில் தங்கி செவ்வாய்கிழமையன்று காலை 10.35 மணிக்கு அழகர்கோவிலுக்குள் எழுந்தருளினார்.
பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி
பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் கதவில் கள்ளழகர் அணிந்திருந்த மாலைகளை அணிவித்து கோவிலுக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரகோஷம் எழுப்பி கோவிந்தா, முழக்கமிட்டதோடு மலர்தூவி வரவேற்றனர்.
அதிர்வேட்டு முழங்கின
அப்போது அதிர்வேட்டுகள் முழங்க மலர்கள் தூவி 18 திருஷ்டி பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி அழகரை வரவேற்றனர். கோவில் யானை சுந்தரவள்ளி தாயார் முன் செல்ல மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் கோவிலுக்குள் சென்று காலை 10.45 மணிக்கு இருப்பிடம் சேர்ந்தார்.
சித்திரை திருவிழா நிளைவு
இன்று (புதன்கிழமை) உற்சவ சாந்தியுடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு சுமார் 411 மண்டபங்களில் அழகர் எழுந்தருளியுள்ளார்.