' ஜெயக்குமார் அப்படி பேசியிருக்கக் கூடாது!' - கோட்டையில் விவாதமான 'காலா' சர்ச்சை
காலா பாடல்களை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
சென்னை: காலா படப் பாடல்களை விமர்சித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசிய பேச்சு கோட்டை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதுகுறித்துப் பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தன்னுடைய திரைப்பட பாடல்களில் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்தினார் எம்.ஜி.ஆர். சினிமாவில் அவர் மது, புகை பிடித்தது கிடையாது.
சட்டம், ஒழுங்கு பிரச்சனையின்றி அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்தநிலையில், திடீரென ஞானம் வந்ததுபோல, நடிகர் ரஜினிகாந்த் விழித்தெழுந்தது போன்று பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதை அரசியல் ஆதாயமாகத்தான் பார்க்கிறோம். கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள பாடல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
பாடல்கள் மூலம் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காலத்தால் அழியாத பாடல்கள் பல இருக்கும்போது காலா பாடல்கள் மழையில் முளைத்த காளான்கள் போல காணாமல் போகும்' என விமர்சித்தார்.
இந்தக் கருத்து அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவினரைப் பொறுத்தவரையில், ரஜினியை அரசியல்ரீதியாக எதிர்ப்பதைத்தான் விரும்புகிறோம். காலா படத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை முன்வைக்கிறார் அதன் இயக்குநர்.
நேற்று வெளியிடப்பட்ட பாடல்களிலும் அதன் தொனி தென்படுகிறது. இதை நேரடியாக விமர்சிக்கும்போது, அந்த சமுதாய மக்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியது வரும் என முதல்வர் தரப்பில் நினைக்கின்றனர். மேற்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் செல்வாக்கை வளர்த்துக் கொண்டே செல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அங்குள்ள அமைச்சர்களும் தொகுதியில் தங்களுக்கென்று சொந்த பலத்தை நிறுவியுள்ளனர். வடபுலத்தில் உள்ள வாக்குகளை ராமதாஸும் தென்மண்டல தொகுதிகளில் உள்ள சமுதாய வாக்குகளை தினகரனும் குறிவைக்கின்றனர். இதற்கேற்ப, பல உத்திகளை அவர்கள் கையாள்கிறார்கள். இந்த மாவட்டங்களில் எல்லாம் தனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இருக்கிறார் முதல்வர்.
எனவேதான், காலா படப் பாடல்களை விமர்சித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசிய பேச்சு கோட்டை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 20 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் சில விஷயங்களைச் செய்து வருகிறார் முதல்வர். ஆனால் ஜெயக்குமார் பேச்சு இதற்கு எதிராக உள்ளது என்பது அதிமுகவினர் கருத்து.உதாரணமாக, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழக அரசு. இது முதல்வரின் நேரடி பார்வையில் நடந்து வரும் விஷயங்கள். இதைப் புரிந்து கொள்ளாமல், காலா படப் பாடல்களை விமர்சித்தது எந்த வகையிலும் சரியானதல்ல என்பதுதான் முதல்வர் தரப்பின் நிலைப்பாடு என்கின்றனர்.