தனுஷ்கோடியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 685 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தபப்படவிருந்த 685 கிலோ கஞ்சாவை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடலோர காவல்படையினர் திங்கட்கிழமை தனுஷ்கோடி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மூன்றாம் திடப்பகுதியில் இலங்கைக்கு கடத்திச் செல்ல யாரோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மூன்றாம் திடப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 685 கிலோ கஞ்சா மூட்டைகள் சிக்கின. அதன் மதிப்பு ரூ.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கஞ்சா மட்டும் தான் பறிமுதல் செய்யப்பட்டது. அதை யார் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்தது என தெரியவில்லை. இது குறித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பல கிலோ கஞ்சா கடத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.