உவ்வே... 'கேஎப்சி' சிக்கனுக்குள் புழு கண்டெடுப்பு- கோவையில் அதிர்ச்சி
கோவை: கேஎப்சி நிறுவனத்தில் வாங்கிய சிக்கனுக்குள் புழு இருந்தது கோவையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்திலும் இதேபோன்ற ஒரு சம்பவம் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்துள்ள நிலையில், கோவை சம்பவத்தால், இந்தியாவில் வீக் எண்ட் வியாபாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்திலுள்ளது கேஎப்சி.
பக்கெட் சிக்கன்
கோவை, ராம்நகர், காளிங்கராயன் வீதியை சேர்ந்தவர் யாசர் அராபத் (23). இவர் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலையிலுள்ள கேஎப்சி சிக்கன் விற்பனையகத்தில் மதியம் இவர் ஒரு 'பக்கெட்' சிக்கனும், கூல்ட்ரிங்சும் ரூ.640க்கு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
உவ்வ.. புழு..
வீட்டில் குடும்பத்தார் அனைவரும் அதை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சிக்கன் துண்டு ஒன்றில் சுருண்ட நிலையில் புழு இருந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கேஎப்சிக்கு, யாசர் அராபத் தகவல் கொடுத்துள்ளார்.
கேஎப்சி அலட்சியமா..?
கேஎப்சியில் இருந்து வந்தவர்கள் சிக்கன் ஆர்டரை மாற்றி புதிதாக வேறு தருவதாக கூறியுள்ளனர். ஆனால் யாசர் அராபத்தோ, இந்த சிக்கனை குழந்தைகளும் சாப்பிட்டு ஏதாவது உடல் நலக்கோளாறு ஆகியிருந்தால் அதற்கு யார் பதில் சொல்வார்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு கேஎப்சி சார்பில் சரியான பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
புகார் அளித்த வாடிக்கையாளர்
கேஎப்சியின் பதிலால் கோபமடைந்த யாசர் அராபத், கோவை உணவு பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சிக்கனை ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆய்வு முடிவு வந்ததும் நடவடிக்கை
இதுகுறித்து கோவை உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி, கதிரவன் கூறுகையில், சிக்கன் மாதிரி எங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் வைத்து ஆய்வு நடந்துவருகிறது. ஆய்வு முடிவை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட கேஎப்சி கடையில் உணவு பாதுகாப்பு வழிமுறைகள் பாதுகாக்கப்படுகிறதா என்பதை அறிய, அதிகாரிகள் குழு சோதனை நடத்த உள்ளது என்றார்.
இது புதிதில்லையே..
2012ம் ஆண்டில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கேஎப்சி சிக்கன் விற்பனையகத்தில் இதுபோல புழு கண்டெடுக்கப்பட்டதும், அதன்பிறகு அந்த கேஎப்சி கிளை மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.