கல்லூரி மாணவி துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை... மரணத்தில் மர்மம் என தாய் போலீசில் புகார்
சேலம் மேச்சேரி கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் மர்மம் உள்ளது என்று மாணவியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேச்சேரி: சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று அவரின் தயார் போலீசில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா தென்னாம்பட்டு மணியார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார் மகள் சோனியா. 19 வயதான இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்றுக் காலை வழக்கம்போல் மாணவி கல்லூரி விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றார். பின்னர், சிறிது நேரத்தில் விடுதி அறைக்கு சென்று விட்டு வருவதாக சக மாணவிகளிடம் கூறிவிட்டு சென்றவர் வெகுநேரம் ஆகியும் வகுப்புக்கு திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த மாணவிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது சோனியா தங்கியிருந்த அறை உள்பக்கமாகத் தாழிடப்பட்டு இருந்தது. உள்ளே சோனியா சுடிதார் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கியபடி கிடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் போனில் தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் மாணவியின் தாய் ஜெயராணி விரைந்து வந்தார். பின்னர், அவர் மேச்சேரி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை கல்லூரி விடுதி காப்பாளர் திட்டியதால் அவள் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம். எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது என தெரிவித்திருந்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோனியாவின் மரணம் மர்மமாக உள்ளது என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேச்சேரி எம்.காளிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சிறிதுநேரம் மறியலில் செய்தனர்.