ஆங்கில மீடியத்தில் படிக்க அச்சம்... திருச்சியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
திருச்சி : பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் படித்து விட்டு கல்லூரியில் ஆங்கில வழிக்கல்வியில் படிக்க முடியாமல் ஏற்பட்ட மன உளைச்சலால் திருச்சி அருகே கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தென்னூர் வாமடத்தைச் சேர்ந்த சேட்டு - சுசீலா தம்பதியின் மகள் ராஜலட்சுமி 17, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
தந்தை சேட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால், தாய் சுசீலா வீட்டு வேலைகள் செய்து மகளை படிக்க வைத்து வந்தார். கல்லூரியில் சேர்வதற்கு முன்பே ராஜலட்சுமி, தமிழ் வழிக்கல்வியில் சேர்க்கும்படி தாயிடம் கூறி வந்தாராம். ஆனால் அவரது விருப்பத்துக்கு மாறாக தாய் ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்தாராம்.
கல்லூரியில் பல மாணவிகள் ஆங்கில வழிக்கல்வியில் படித்து வந்தவர்கள் என்பதால் அவர்களுடன் போட்டி போட்டு ராஜ லட்சுமியால் கல்லூரியில் படிக்க முடியவில்லையாம். இதுதொடர்பாக மாணவி பலமுறை எடுத்துக் கூறியும் சுசீலா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ராஜலட்சுமி கல்லூரிக்கு போகவில்லையாம். நேற்று வியாழக்கிழமையன்று காலையில் அவரது தாயார் சுசீலா வேலைக்குச் சென்ற பிறகு வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
இவரது அலறல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். அதற்குள் உடல் முழுவதும் தீயில் கருகி படுகாயமடைந்த ராஜலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த தில்லை நகர் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்தனர்.இதில், வீட்டில் ராஜலட்சுமி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில் எனது விருப்பத்துக்கு மாறாக ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமல்ல என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டு வேலை செய்து மகளை படிக்க வைத்த சுசீலாவிற்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த சில வருடங்களுக்கு உள்ளாகவே மகளையும் இழந்து தவிக்கிறார் சுசீலா.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐஐடி வளாகத்தில் ஆராய்ச்சி பிரிவு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மாணவிகளுக்கு கல்வியில் ஏற்படும் மன அழுத்தமே அவர்களை தற்கொலைக்கு தள்ளுகிறது என்பதுதான் சோகம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு சரியான கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.