முதலில் கையெழுத்து இல்லாமல்... பின்னர் கையெழுத்துடன் வெளியான ஜெ. அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையில் அவரது கையெழுத்து தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மக்களின் பிரார்த்தனையால் மறுவாழ்வு பெற்றுள்ளதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். முதலில் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லாமல் இருந்தது; பின்னர் ஜெயலலிதாவின் கையெழுத்துடன் அதே அறிக்கை மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 50 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரவக்குறிச்சி உள்ளிட்ட இடைத்தேர்தலின் போது அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுக்களுடன் ஜெயலலிதா பெருவிரல் ரேகை வைத்த படிவங்கள் கொடுக்கப்பட்டன.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அந்த அளவுக்கா ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் இன்று திடீரென ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் 4 தொகுதி தேர்தல் தொடர்பாக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜெயலலிதா, மக்களின் பிரார்த்தனையால் மறுவாழ்வு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு இந்த அறிக்கை முதலில் அனுப்பி வைக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லாமல் இருந்தது. பின்னர் அதே அறிக்கை ஜெயலலிதாவின் கையெழுத்துடன் வெளியானது.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை. pic.twitter.com/scn4W0c5Hs
— AIADMK (@AIADMKOfficial) November 13, 2016
அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் கூட ஜெயலலிதாவின் கையெழுத்தில்லாத அறிக்கைதான் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழப்பம் ஏன் ஏற்பட்டது? யாரால் ஏற்படுத்தப்பட்டது? என்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.