திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் காங்கிரஸ் அதை ஆதரிக்கும்: திருநாவுக்கரசர்
திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் காங்கிரஸ் அதை ஆதரிக்கும் என்று திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
சென்னை : தமிழக அரசு மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் காங்கிரஸ் கட்சி அதனை ஆதரிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநில கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது.

இதில் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி உட்பட ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ வசந்த குமார் மட்டும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து திருநாவுக்கரசர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ஓகி புயல் பாதிப்பு மற்றும் அதன் மீட்பு பணிகள், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்னை, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறைப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசுக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications