தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி… : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைக்க, 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து நின்று மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் நிதி அமைச்சர், இல்லையென்றால் காவல்துறையை கேட்போம் என்று பெரிய குண்டு ஒன்றை போட்டுள்ளார் இளங்கோவன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 23ம் தேதி திருச்சியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறார் இளங்கோவன். போகும் இடமெங்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பற்றியே பேசி வருகிறார்.
234 தொகுதிகள் இலக்கு
மதுரை, ஈரோடு, சேலம் என்று போகும் இடமெங்கும் காமராஜர் ஆட்சி அமைக்க 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதே, எங்கள் குறிக்கோள்.அதை இலக்காக கொண்டு எங்கள் செயல்பாடுகள் இருக்கின்றன.
தற்போது சாத்தியமில்லை
காமராஜர் ஆட்சி அதற்கான காலம் இன்னும் அமையவில்லை. அது தற்போது சாத்தியமில்லை என்றால் கூட்டணியின் அவசியம் ஏற்பட்டால் அதுபற்றி அகில இந்திய தலைமையான சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் முடிவு செய்வார்கள்.
அமைச்சர் பதவி
தேர்தலில் தேவைப்பட்டால் கூட்டணி சேருவோம். ஆனால் அந்த கூட்டணியில் காங்கிரசுக்கான உரிய இடம் இருக்கும் நிதி அமைச்சர் நாற்காலியை கேட்போம் இல்லையென்றால் காவல்துறையை கேட்போம். முன்பை போல இருக்க நாம் ஒன்றும் இளிச்சவாயர்கள் இல்லை என்றார்.
தூக்கமேயில்லையே
புலி வரப்போகிறது... புலி வரப்போகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். 23ம் தேதி புலி வரப்போகிறது. ஆனால் எனக்கு கவலை அதிகரித்துவிட்டது. மேடைக்கு இத்தனை லட்சம் செலவாகுமே, எலக்ட்ரிசிட்டிக்கு இத்தனை லட்சம் செலவாகுமே என்று எனக்கு இரவு முழுக்க தூக்கமே வரவில்லை.
காங்கிரஸ் தொண்டர்கள்
காங்கிரஸ் தொண்டர்கள்தான் சொந்த பணத்தில் குடும்பத்தையும். கட்சியையும் காப்பாற்றுகிறார்கள். மற்றக்கட்சியில் சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வருகிறார்கள்.
பிரதமர் பதவி
நானும், கே.வி.தங்கபாலுவும் எம்.பியாக இருந்திருக்கிறோம், அமைச்சர்களாக இருந்திருக்கிறோம். இன்னும் இரண்டே இரண்டு பதவிகளுக்குத்தான் போகவில்லை ஒன்று, இந்திய நாட்டின் பிரதமர்; இன்னொன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். இந்த இரண்டுக்குமே நாங்கள் லாயக்கு இல்லாதவர்கள்.
முதல்வர் கனவு
காலம் நிலையானது அல்ல. நாங்கள் இறந்த பிறகு. இளங்கோவன் எக்ஸ் காங்கிரஸ் தலைவர் என்று சொல்வதில் பெருமை இல்லை. தங்கபாலுவுக்கும் அப்படித்தான். 67ல் தோற்ற காங்கிரஸ் இளங்கோவன், தங்கபாலுவால் வென்றது என்பதுதான் எங்களுக்கு பெருமை. அதற்காகத்தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
சத்தியமாக சாத்தியமா?
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்னவோ போகும் இடமெங்கும் உற்சாகமாகத்தான் பேசி வருகிறார் ஆனால் அதை கேட்கும் தொண்டர்கள்தான் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர்.