அரவக்குறிச்சியில் மீண்டும் திமுக போட்டி... காங். ஜோதிமணிக்கு தொடரும் ஏமாற்றம்!
சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து வேட்பாளர் நேர்காணலையும் அறிவித்துவிட்டது திமுக. இதனால் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளார்.
சட்டசபை தேர்தலின் போது அரவக்குறிச்சி தொகுதியை மையமாக வைத்து ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் நடந்தேறின. பண பலம் வாய்ந்த திமுகவின் கேசி பழனிச்சாமி மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விரும்பினார்.
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே காங்கிரஸின் ஜோதிமணி அத்தொகுதியில் களமிறங்கி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார். கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகளை பிற கட்சிகள் கேட்பது இல்லை என்ற உடன்பாட்டின் அடிப்படையில் கடைசியில் அரவக்குறிச்சி தொகுதி திமுகவுக்கே போனது.
ஜோதிமணி பஞ்சாயத்து
இதனால் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றெல்லாம் கூட ஜோதிமணி அறிவித்தார். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போதைய தலைவர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் ராகுல்காந்தி சொன்னதால்தான் அரவக்குறிச்சியில் போட்டியிடுவதாக ஜோதிமணி கூறியிருந்தார். பின்னர் அவரும் சமாதானமடைந்து அமைதியாகிவிட்டார்.
பழனிச்சாமி விரும்பவில்லை
அதே நேரத்தில் பணப்பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி தேர்தலே ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் திமுக வேட்பாளராக தாம் போட்டியிட விரும்பவில்லை என கே.சி. பழனிச்சாமி அக்கட்சி தலைமையிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது இதை பழனிச்சாமியும் மறுக்கவில்லை.
இதுதான் காரணம்
தற்போது அரவக்குறிச்சி தொகுதிக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் தோற்றாலும் தம்முடைய 'மணல்' தொழிலுக்கு பாதிப்பு என்பது கே.சி. பழனிச்சாமியின் எண்ணம். இதனால் அவர் மீண்டும் நிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
தயக்கம்
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட, தாம் போட்டியிடத்தான் போகிறேன் என கேசி பழனிச்சாமி உறுதியாக கூறவில்லை. அத்துடன் இது தொடர்பாக கட்சி மேலிடமே முடிவெடுக்கும் என தயக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
காங்கிரஸுக்கு கிடைக்குமா?
அப்படி பழனிச்சாமி போட்டியிடாத நிலையில் திமுக மற்றொரு வேட்பாளரை நிறுத்துமா அல்லது ஏற்கனவே அரவக்குறிச்சிக்காக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு கொடுத்துவிடுமா? என்ற கேள்வி எழுந்தது.
திமுக முடிவு
இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவு செய்து வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் வரும் 21-ந் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அரவக்குறிச்சி கிடைக்கவில்லை. அரவக்குறிச்சி தொகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தம்மை முன்னிறுத்திய ஜோதிமணிக்கு மீண்டும் ஏமாற்றமே!