ஒகேனக்கல்லில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் பரிசல் ஓட்டிகள் போராட்டம் - தடை நீக்க கோரிக்கை
ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பரிசல் ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தொம்பச்சிக்கல் பரிசல் துறையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
இதையடுத்து, ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால், பரிசல் ஓட்டிகள் சுமார் 40 நாட்களுக்கும் மேலாக வருவாய் இன்றி சிரமப்படுகின்றனர்.
"பரிசல் ஆய்வு பணியும் முடிந்துள்ளது. மேலும், பரிசலோட்டிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் நடந்து வருகிறது. குழந்தைகளுக்கான பிரத்தியேக லைப் ஜாக்கெட் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரு பரிசல்களுடன், ஒரு பரிசலில் மீட்பு குழுவினர் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்தின்றி பாதுகாப்பாக பரிசல் இயக்குவது குறித்து மாவட்ட நிர்வாகம், போலீசார், வனத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதுவரையில் தடை நீடிக்கும்" என்று தர்மபுரி ஆட்சியர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர். மேலும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.