மின்வாரிய பணியாளர்கள் நியமனம் தாமதம் ஏன்? ராமதாஸ் சொல்லும் திடுக் காரணம்
கடந்த ஆண்டு நடைபெற்ற மின்வாரிய பணியாளர்கள் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இதுவரை யாரையும் நேர்காணலுக்கு அழைக்காததன் பின்னணியில் ஊழல் தவிர வேறென்ன இருக்க முடியும் என்று பாமக நிற
சென்னை: மின்வாரியத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான பணியாளர்களுக்கான நியமனத்தில் தாமதம் ஏற்பட்டு வருவதன் பின்புலத்தில் ஊழல், லஞ்சம் போன்றவை உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கள உதவியாளர்கள், மின்சார தொழில்நுட்ப உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், உதவியாளர்கள் 100 பேர், பரிசோதகர்கள், எந்திரவியல் உதவியாளர், இளநிலை தணிக்கையாளர் என மொத்தம் 2175 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து இப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது. ஆனால் கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கான தேர்வை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
இதனால் மேற்கண்ட பணிகள் தவிர மீதமுள்ள 750 பணி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அவற்றில் உதவி வரைவாளர், இளநிலை தணிக்கையாளர்கள், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2 முதல் 7ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக நேர்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
நேர்காணல் தேதி நவம்பர் மாதத்துக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று வரை நேர்காணல் தேதி அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மின் வாரியப் பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் ஒரு பணியாளர் கூட நியமிக்கப்படாதது அரசு நிர்வாகம் செயல்படாததையே காட்டுகிறது.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி இடைத் தேர்தல்கள் முடிந்து நான்கு மாதங்கள் முடிவடைந்து விட்டன. இவ்வளவு நாட்களாகியும் நேர்காணல்களை நடத்தி பணியாளர்களை நியமிக்காததற்கு பின்புலத்தில் ஊழல் திளைத்துள்ளதுதான் காரணமாக இருக்க முடியும்.
அமைச்சர்களின் துணையோடு லட்சக்கணக்கான பணம் கொடுத்து நேர்காணல் நடத்தப்படுவதற்கு முன்னர் அப்பணிகளை பெற பலர் முயற்சித்து வருகின்றனர்.
தற்போதைய பினாமி ஆட்சியில் சசிகலா தரப்பு அளிக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கே அரசுப்பணிகள் வழங்க வேண்டும் என்று அவர்கள் அரசு நிர்வாகத்தை கட்டாயப்படுத்துகின்றனர்.
மின்வாரிய பணியாளர் நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.