அனிதா விவகாரம்.. டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாலபாரதி கடும் கண்டனம்
சென்னை : அனிதா மரணம் குறித்த விமர்சித்த டாக்டர். கிருஷ்ணசாமி குறித்து மிகக் கடுமையான பதிவு ஒன்றை தனது முகநூலில் முன்னாள் சிபிஎம் எம்எல்ஏ பாலபாரதி போட்டுள்ளார்.
மருத்துவ சீட் கிடைக்காத சோகத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவிற்காக தமிழகத்தின் மக்கள் வெகுண்டெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அனிதாவின் தற்கொலைக்கு நீட் காரணமல்ல வேறு ஏதாவது காரணமாக என்று சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி முகநூலில் கிருஷ்ணசாமி தன்னுடைய மகளுக்கு புறவாசல் வழியாக மருத்துவ சீட் பெற்றதாக பரபரப்பு பதிவைப் போட்டுள்ளார். பாலபாரதியின் பதிவு இதுதான்:

முதல்வரிடம் உதவி கேட்டீர்களே
2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷ்ணசாமி நான் மறக்கவில்லை.

பொத்தென விழுந்த சுயநலம்
அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம் போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள .. டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜைமீது பொத்தென்று விழுந்தது.

வேதனை
தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால் இப்படி புறவாசல்வழியாக உதவியைப் பெற்றுக் கொண்டவர் தமது மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவதுதான் வேதனை.

கேப்பையில் வழியும் பொய்
தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது வீண்பழியை சுமத்துகிறார், பாஜக அதிமுக அரசுகள் வேடிக்கை பார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப் பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம்.கேப்பையில் நெய்மட்டுமல்ல பொய்யும்கூட வழிகிறதாம்.!

பதிவை நீக்க மாட்டேன்
இந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மறுத்துள்ளார் பாலபாரதி. நான் எக்காரணம் கொண்டும் அதை நீக்கமாட்டேன் என்று பாலபாரதி விளக்கியுள்ளார்.

ஒன் இந்தியாவிடம் தகவல்
பாலபாரதியின் முகநூல் பதிவு குறித்து ஒன்இந்தியா அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது கூறியதாவது : 2015 - 16 காலகட்டத்தில் சட்டசபையில் அதிமுகவிற்கு எதிராக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அடிக்கடி வெளிநடப்பு செய்தார். அப்போது அவரை அடக்குவதற்காக முதல்வர் ஜெயலலிதா அவையில் இருந்த போது அதிகமு அமைச்சர், கிருஷ்ணசாமியிடம் அவருடைய மகளுக்கு சிஎம் கோட்டாவில் மருத்துவ சீட் வாங்கியதைக் கூற அதை அவர் ஒப்புக் கொண்டார்.

அவைக்குறிப்பு உள்ளது
நிலைமை இப்படி இருக்க தன்னுடைய மகள் என்றால் சிஎம் கோட்டாவில் சீட் வாங்கினார், அதுவே மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் என்றால் நீட் எழுத வேண்டியது தானே என்று சொல்கிறார். டாக்டர் கிருஷ்ணசாமி பாஜகவிற்காகவே செயல்படுகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இன்று காலையில் எதேச்சையாக இந்த சம்பவம் நினைவுக்கு வந்ததாலேயே அதை பதிவிட்டேன், அதில் எந்தத் தவறும் இல்லை, இந்த சம்பவம் அவைக் குறிப்பிலேயே இருக்கிறது என்றும் பாலபாரதி கூறினார்.












Click it and Unblock the Notifications