சென்னையில் கடத்த இருந்த 18 அரிய சங்குகள் – சுங்கத்துறையினர் பறிமுதல்!
சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த 18 அரிய வகை சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை தாய்லாந்துக்கு விமானம் செல்ல இருந்தது.
இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பயணியிடம் சோதனை:
அப்போது சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த சவுக்கத்சால் என்பவரது சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தபோது எதுவுமில்லை.
அட்டைப் பெட்டியில் சங்குகள்:
ஆனால் அவர் வைத்திருந்த அட்டை பெட்டிகளை சோதனை செய்தனர். அதில் 18 கிலோ எடை கொண்ட அரிய வகை சங்குகள் இருந்தன.
இந்திய அரசு தடை:
இந்த வகை சங்குகள் வெளிநாடுகளுக்கு கடத்த இந்திய அரசு தடை விதித்து இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்தனர். சவுக்கத்சாலின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
வனத்துறையினர் பறிமுதல்:
இது குறித்து கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கிண்டி வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையிலான வனத்துறையினர் வந்து அரியவகை சங்குகளை கைப்பற்றினர்.
5 ஆயிரம் பணம்:
சவுக்கத்சாலிடம் நடத்திய விசாரணையில் "சென்னை விமான நிலையத்தில் தன்னை சந்தித்த 2 பேர் இந்த பார்சலை கொண்டு சென்று தாய்லாந்து விமான நிலையத்தில் தந்தால் ரூபாய் 5 ஆயிரம் பணம் தருவார்கள் என்றனர்.
ஆசையால் வந்த வினை:
பணத்திற்கு ஆசைப்பட்டு வாங்கினேன். இதில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது' என கூறினார். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.