வருகிறது "நாடா" புயல்.. கடலூர் அருகே டிச.2 அதிகாலையில் கரையைக் கடக்கும் - வானிலை மையம்
வங்கக் கடலில் உருவான நாடா புயல் கடலூருக்கு அருகே டிசம்பர் 2ல் கரையைக் கடக்கும் என்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கி இந்த ஆண்டு சரியான மழை அளவு பதிவாகவில்லை. இந்த நிலையில் கடந்த 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புதன்கிழமை காலையில் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி அதிகாலை வேதாரண்யம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே கடலூருக்கு அருகே புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னைக்கு 830 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். 45 வது முறையான உருவான புயலுக்கு நாடா என்று ஓமன் நாடு பெயரிட்டுள்ளது.
வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக புதன்கிழமை மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இன்று முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும். டிசம்பர் 2ம் தேதி புயல் கடலூருக்கு அருகே கடக்கும் போது பல பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும். மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.