சொத்துக்குவிப்பு வழக்கு - ஓபிஎஸ் அணி மாஜி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு 2 ஆண்டு சிறை
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முசிறி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பிரின்ஸ் தங்கவேலுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பினை அளித்துள்ளது.
முசிறி தொகுதியில் அதிமுக வேட்பாளராக 1989, 1991 ஆண்டு போட்டியிட்டார் பிரின்ஸ் தங்கவேலு. 1991-96ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி காலத்தில் முசிறி தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 20 லட்சம் சொத்துக்களை குவித்தார் என்று வழக்கு தொடரப்பட்டது. திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் தங்கவேலுவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு பிரின்ஸ் தங்கவேலு ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.