தீபாவின் வீட்டு முன்பு இருந்த வருங்கால முதல்வரே பேனர் அகற்றம்- தொண்டர்கள் கொதிப்பு
தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி அவரது வீட்டிற்கு முன்பாக கூடும் தொண்டர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
சென்னை : ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அதிமுக தொண்டர்களில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகிறார்கள். தீபா தியாகராயநகரில் உள்ள சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார்.
தீபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக தொண்டர்கள் தினமும் வீட்டு முன்பு குவிந்து வருகிறார்கள். அவரது வீட்டு முன்பு வருகை பதிவேடு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வரும் தொண்டர்கள் அதில் கையெழுத்து போட்டு தங்களது ஆதரவையும், விருப்பத்தையும் பதிவு செய்து வருகிறார்கள். தன்னை சந்திக்க வரும் தொண்டர்களை தீபா சந்தித்து பேசி வருகிறார்.
அரசியலுக்கு வருவேன்
ஜெயலலிதா மறைந்த 30வது நாளில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தொண்டர்கள் தீபாவின் வீடு முன்பு குவிந்தனர். அப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தினர். அவர்கள் மத்தியில் பேசிய தீபா, விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று கூறினார்.
என்னை தடுக்க முடியாது
மாடியில் நின்றபடி, தொண்டர்களைப் பார்த்து இரட்டை விரலை காட்டி கை அசைத்து தீபா உற்சாகப்படுத்தினார். அப்போது, தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார்.எனது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிய தீபா, ஜெயலலிதாவின் பெயரையும், புகழையும் காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
குவியும் தொண்டர்கள்
அரசியலுக்கு வருவது பற்றி வெளிப்படையாக தெளிவான அறிவிப்பு எதையும் வெளியிடாமல் இருந்து வந்த தீபா, முதல் முறையாக தனது அரசியல் பயணம் பற்றிய அறிவிப்பை தொண்டர்கள் மத்தியில் வெளியிட்டிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கணவரிடம் முறையிட்ட தொண்டர்கள்
நேற்று தீபா வீட்டில் இல்லாததால் அவரது கணவர் மாதவனை சந்தித்து தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அப்போது யாருக்காகவும், எதற்காகவும், நீங்கள் பயப்படவேண்டாம். தீபா அம்மாவை பார்க்கும்போது ஜெயலலிதா அம்மாவை பார்ப்பது போல் உள்ளது. அவரது வாரிசான தீபாவே அதிமுகவை வழிநடத்த வேண்டும். அதற்கு நீங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றனர்.
கண்ணீர் மல்க வேண்டுகோள்
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே கட்சிக்கு உழைத்து வருகிறோம். எனவே தயங்காமல் அரசியலுக்கு வாருங்கள். அ.தி.மு.க.வினர் மட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவரும் ஆதரிப்பார்கள் என்றனர். தீபாவின் கணவர் மாதவனின் கையை பிடித்துக் கொண்டு பெண்கள் பலர் அழுது கொண்டே தங்கள் கோரிக்கையை வைத்தனர்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு அம்மா வழியில் கட்சி பணி ஆற்றினோம். இனி எங்களுக்கு நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும் என்றார்கள்.
தீபா மதிப்பளிப்பார்
நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் அனைவரது கருத்தையும் பொறுமையாக கேட்டு கொண்ட மாதவன் உங்கள் உணர்வுகளுக்கு தீபா மதிப்பளிப்பார் என்றார். பெண் தொண்டர்கள் பலரும் ஆவேசமாகவும் அதே நேரத்தில் உருக்கமாகவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
கூடும் கூட்டம்
தீபாவின் வீட்டில் இன்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் திரண்டனர். சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் வேலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, ஸ்ரீரங்கம், புதுவையில் இருந்தும் அதிமுகவினர் வந்திருந்தனர்.
கடைகள் பேனர்கள்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தீபா படம் பொறித்த அட்டைகளும் அமோகமாக விற்பனையாகின்றன. தீபாவின் வீட்டு முன்பு வருங்கால முதல்வரே என்று பேனர் வைத்திருந்தனர். அதனை உடனடியாக இரவோடு இரவாக அகற்றியதால் தொண்டர்கள் கொதிப்படைந்தனர்.