ஆதார் கேட்டு நச்சரிக்கும் வங்கிகள்.. நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!
மத்திய அரசின் அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் நெல்லை, தூத்துக்குடி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நெல்லை: நெல்லை, தூத்துக்குடியில் பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 425 கிராம பஞ்சாயத்துகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 408 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. இங்கு பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. பல விவசாயிகளுக்கு வங்கி கணக்கு, ஆதார் அட்டை போன்ற விபரங்கள் இல்லை. இதனால் அவர்கள் தங்கள் தேவைக்காக பணத்தை வீட்டில் வைத்திருந்தனர்.
தற்போது ரூ.500, ரூ.1000 செல்லாது என்பதால் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கிராமங்களில் உள்ள வங்கி, தபால் நிலையங்களுக்கு சென்றால் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். சில வங்கிகளில் போதிய பணம் இல்லாமல் டெபாசிட் செய்து விட்டு நாளை வந்து வாங்கி கொள்ளுமாறு ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதனால் காய்கறி மார்கெட்டுகள், பலசரக்கு கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த நேரத்தை பயன்படுத்தி கிராமப்புற வங்கிகள் பொது மக்களிடம் ஆதார் அட்டையை கேட்டு கெடுபிடி செய்து வருகிறது. பணத்தை மாற்ற ஏதேனும் ஒரு அடையாள சான்று காண்பித்தால் போதும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பல வங்கிகள் ஆதாரை மட்டுமே கேட்பது புரியாத புதிராக உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆதார் எண் இல்லாத விவசாயிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.