கோடை வெப்பத்தை தணிக்க ஜில் மழை பெய்யுமாம் - வானிலை கூல் அறிவிப்பு
தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஜில் அறிவிப்பு
சென்னை: வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. இன்று சேலத்தில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் வெப்பம் சற்றே தணிந்திருந்து ஜில் காற்றும் வீசியது.
இதனிடையே காற்றழுத்த தாழ்வு நிலையால் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது நிலவுகிறது என்றார்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்துக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையில் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் உள்பகுதிகளில் வெப்ப நிலை இயல்பைவிட உயர்ந்து காணப்படும் என்றார். மேலும் வெப்ப சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய கூடும் என்றும் அவர் கூறினார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களான சென்னை, கடலூர், ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் கடலோர பிரதேசங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.