காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தால்... கௌடா சொல்வது என்ன?
காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தால் கர்நாடகத்தில் நடைபெற வேண்டிய மாற்றம் குறித்து தேவ கௌடா தெரிவித்தார்.
ஓசூர்: காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தால் கர்நாடகத்தில் விவசாய முறையையே மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என தேவகவுடா தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கர்நாடக அரசு மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்நிலையில் ஓசூர் அருகே கனிமங்கலம் கிராமத்தில் உள்ள கதகதம்மாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜீமங்கலம் கிராமத்தில் உள்ள தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் வீட்டுக்கு சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தேவகவுடா, ஜூன் மாதத்தில் நடுவர்மன்றம் குறிப்பிட்டதை விட அதிக அளவு நீர் தமிழகத்திற்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட நீரின் அளவு கணக்கிடப்படவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தம் கொண்டு வரவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடகத்தில் விவசாய முறையையே மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரிவித்தார்.