அதிமுக கொடியில் அண்ணா: டிடிவி கொடியில் அம்மா: கட்சியின் கொடி எடப்பாடி பார்வையிலிருந்து தப்புமா?
அதிமுக கொடியில் அண்ணாவின் படம் உள்ளது போல் டிடிவி தினகரனின் கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
சென்னை: அதிமுகவின் கொடியில் அண்ணாவின் படம் உள்ளது போல் டிடிவி தினகரனின் கொடியில் ஜெயலலிதாவின் படத்தை அச்சிட்டுள்ளார் தினகரன்.
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதற்காக தனி அமைப்பு ஒன்றை தினகரன் தனித்து தொடங்க முடிவு செய்தார். அதற்கு முன்னதாக ஆர் கே நகர் இடைத்தேர்தல் வந்தது.
அப்போது சுயேச்சை உறுப்பினராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். அதில் வெற்றி பெற்ற அவர் முதல் முறையாக சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
சசிகலா கோபம்
அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து பெற்றே தீர வேணடும் என்பதில் தினகரன் முனைப்பு காட்டி வருகிறார். அதிமுக என்ற மாபெரும் இயக்கம் கையை விட்டு போனதிலிருந்து தினகரன் மீது சசிகலா கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரட்டை இலைக்காக...
இரட்டை இலை சின்னத்தை எப்படியும் மீட்டே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் டிடிவி தினகரன் உள்ளதால் தனக்கென்று ஒரு தனி அமைப்பை தொடங்க டிடிவி முடிவு செய்தார். அதன்படி குக்கர் சின்னத்தையும் போராடி பெற்று விட்டார்.
3 கட்சிகள் கேட்டார் தினகரன்
அனைத்திந்திய அண்ணா எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்குமாறு டிடிவி தினகரன் கேட்டார். இதனிடையே அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை தினகரன் பயன்படுத்தினால் சட்டபடி எதிர்கொள்வோம் என்று எடப்பாடி அணி தெரிவித்திருந்தது.
கட்சி கொடியும் அறிமுகம்
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரையும் புறக்கணித்துவிட்டு இன்றைய தினம் மேலூரில் அவர் தனது அமைப்பின் பெயரை அறிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அமைப்புக்கு பெயரை அறிவித்தார். அது போல் கட்சியின் கொடியில் கருப்பு, வெள்ளை, சிகப்பு நிறத்துக்கு மத்தியில் ஜெயலலிதாவின் உருவம் பொதிக்கப்பட்டிருந்தது.
அமமுக கொடி
அதிமுக கொடியில் அண்ணாவின் உருவமும், அமுமுக கொடியில் ஜெயலலிதாவின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா, எம்ஜிஆரை ஆகியோரின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி அணி ஏற்கெனவே நிபந்தனை விதித்துள்ள நிலையில் ஜெயலலிதாவின் உருவம் பொதித்த கொடியை எடப்பாடி தரப்பு ஆட்சேபணை செய்யாமல் இருப்பார்களா என்ன.
ஜெ.வுக்கு ஓட்டு
கடந்த 2011-ஆம் ஆண்டு, 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவுக்காகவே ஓட்டு போட்டவர்கள் ஏராளம். அப்படியிருக்க இந்த கொடி, இந்த பெயரில் கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சித்தேர்தல், சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தினகரன் தெரிவித்துள்ள நிலையில் எடப்பாடி தரப்புக்கு நிச்சயம் வாக்குகள் சரியும் நிலை ஏற்படலாம் என்பதால் அதை சட்டரீதியாக அணுகுவதற்கான ஆயத்தங்களை செய்யக் கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.