தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு: அட்டாக் பாண்டி உட்பட 17 பேருக்கு பிடிவாரண்ட் கோரி சிபிஐ மனு!!
மதுரை: தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கு எதிராக பிடிவாரண்ட்டை பிறப்பிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சிபிஐ இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.
மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் 2007-ல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் 17 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை மறுஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
அதேபோல் பத்திரிகை அலுவலக எரிப்பில் உயிரிழந்த வினோத்தின் தாயார் பூங்கொடியும் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேருக்கும் தண்டனை வழங்கக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்தார். இருப்பினும் இந்த வழக்கில் சிபிஐ மெத்தனம்காட்டுவதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இதனிடையே நீதிபதிகள் பி.ஆர். சிவக்குமார், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் கடந்த செவ்வாயன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது இவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையை திட்டமிட்டு இழுத்தடிக்கின்றனர். சிபிஐ தரப்பிலும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவதில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒத்துழைக்காத நிலையிலும், இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட முடியும். குற்றம்சாட்டப்பவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி சிபிஐ மனு தாக்கல் செய்வதாகக் கூறியதை ஏற்றுக்கொண்டு, விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அட்டாக் பாண்டி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.