தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு
தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்தவைத்துள்ளது.
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இருதரப்பும் ஜன 22க்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி அக்டோபர் 4ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில், 500 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சபாநாயகர் தரப்பு தாக்கல் செய்தது. அப்போது மறு உத்தரவு வரும்வரை பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்துவதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.
இதனைத்தொடர்ந்து பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு கடந்த 10ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் வழக்கை இன்று ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பும் ஜன 22க்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.