மாப்ளே, டிரெய்னைப் பிடிக்கனும் ஓடு, ஓடு.. தீபாவளியால் களை கட்டிய ரயில் நிலையங்கள்!
சென்னை: தீபாவளி வந்து விட்டது. சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகளின் கூட்டத்தால் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூட்டம் அலை மோத ஆரம்பித்து விட்டது.
பலர் வெள்ளிக்கிழமையே கிளம்பிச் சென்று விட்டனர். இன்னும் பலர் சனிக்கிழமை கிளம்பிப் போனார்கள். பலர் நேற்று இரவு ஊர்களுக்குப் படையெடுத்தனர். ஆனால் இன்று முதல்தான் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
நாளை இரவெல்லாம் பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் எள்ளைப் போட்டால் எள்ளுருண்டையாக வரும் அளவுக்கு கூட்டம் கிடுகிடுக்கும்.
எழும்பூர்
சென்னையில் தீபாவளி சமயத்தில் மிகப் பெரிய அளவில் பயணிகள் கூட்டம் அலை மோதும் ரயில் நிலையமாக சென்னை எழும்பூர்தான் விளங்கும்.
தென் மாவட்ட மக்கள்
காரணம், தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் அனைத்தும் எழும்பூரிலிருந்துதான் கிளம்பிச் செல்கின்ன. எனவே சென்டிரல் ரயில் நிலையத்தை விட இங்குதான் கூட்டம் கட்டி ஏறும்.
தீபாவளி கூட்டம் ஜோர்
தற்போது தீபாவளிக்காக மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் மக்கள் கூட்டம் எழும்பூர் ரயில் நிலையத்தில் அலை மோதுகிறது.
பிளாட்பாரம் முழுவதும் மக்கள் கூட்டம்
பிளாட்பாரங்கள் அனைத்தும் நிரம்பி வழியும் அளவுக்கு தீபாவளிக் கூட்டம் அலை மோதுகிறது.
அன் ரிசர்வ்ட் பெட்டிகளுக்கு நீண்ட கியூ
முன்பே முன்பதிவு செய்து வைத்து விட்டுத்தான் பெரும்பாலான பயணிகள் வருகின்றனர் என்றாலும் டிக்கெட் கிடைக்காமல் அன் ரிசர்வ்ட் பெட்டிகளில் பயணிக்கும் கூட்டமும் அதே அளவில் திரண்டு வருகிறது. இவர்களை நீண்ட கியூ வரிசையில் நிறுத்தி போலீஸார் பெட்டிகளில் ஏற வழி செய்கின்றனர்.
ரிசர்வ்ட் பெட்டிகளிலும் எமக் கூட்டம்
அதேசமயம் வைகை உள்ளிட்ட பகல் நேர ரயில்களில் ரிசர்வ்ட் பெட்டிகளிலும் கூட முன்பதிவு செய்யாமல் கரண்ட் டிக்கெட் வாங்கியவர்கள் பெருமளவில் ஏறிப் பயணிக்கின்றனர். இதனால் ரயில் முழுவதும் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
நாளை நிற்கக் கூட இடம் இருக்காது
நாளைக்கு நிற்கக் கூட இடம் இருக்காது என்று கூறும் அளவுக்கு ரயில் பெட்டிகள் பெரும் கூட்டத்துடன் பயணிக்கும் என்பதால் மக்கள் இன்றே கிடைக்கும் ரயில் அல்லது பஸ்ஸில் ஏறி ஊருக்குப் போய் தீபாவளியை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.