திமுக சொம்பில் விழாமல் நழுவி பக்கத்து டம்ளரில் விழுந்த "பழம்"!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் களம் ஒவ்வொரு முறையும் யாரையாவது சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைய வைக்கும் தேர்தல் என்பது மறுபடியும் உண்மையாகியிருக்கின்றது.
அப்படி இந்த முறை பலரையும் பரிதாபமாக வரிசை கட்டி நிற்க வைத்தவர் விஜயகாந்த். எவனா இருந்தாலும் வெட்டுவேன், தூக்கி அடிச்சுருவேன், மீடியாவை காறி துப்புவேன் என்று பாசிட்டிவாகவோ, நெகட்டிவாகவோ லைம் லைட்டில் மக்களிடையே செல்வாக்கைப் பெற்றுள்ளவர்.
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சி தலைவராக முன்னேறினாலும், கழட்டிவிடப்பட்டு பாடம் கற்றுக் கொண்டவர் இந்தமுறை சிந்தனையை கொஞ்சம் மாற்றிப் போட்டிருக்கின்றார்.
நான்லாம் அப்பவே அப்டி:
தமிழகத்தின் இரண்டு பலமான கட்சிகளிடமும் சிக்கி வறுபட வேண்டாம் என்றும், ஒன்றில் மூன்றாக நிற்க வேண்டாம் என்றும் ஒரு தைரியமான முடிவை எடுத்திருக்கின்றார் விஜயகாந்த் என்றே சொல்ல வேண்டும்.
விழுந்துருச்சே விழுந்துருச்சே:
திமுக தலைவர் கருணாநிதி வார்த்தைக்கு வார்த்தை "பழம் நழுவி பாலில் விழும்" என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் கடந்த தேர்தலில் 29 தொகுதிகளில் ஜெயித்த தைரியம் விஜயகாந்தை இந்த முறை போட்டுதான் பார்க்கலாமே என்று தூண்டி விட்டுள்ளது.
இதுதாங்கோ ராஜதந்திரம்:
மநகூவும் ஒரு சரியான பிடிமானத்திற்கு அலைந்து கொண்டிருந்த நிலையில் விஜயகாந்த்தின் முடிவினை சாதகமாக்கிக் கொண்டுள்ளது. 124 தொகுதிகள், முதல்வர் வேட்பாளர் என்று வளைத்தும் விட்டது.
இது சரியான கணக்கு:
அதன் எதிரொலியாகத்தான் பாலில் விழாமல் ஊசலாடிக் கொண்டிருந்த பழம் இன்று திமுக சொம்பில் விழாமல் தொபுக்கடீர் என்று பக்கத்து டம்ளரான ம.ந.கூவில் குதித்துள்ளது. ஒருவகையில் மக்கள் செல்வாக்கையும் தெரிந்து கொள்ளலாம், கூடவே இரண்டு கட்சிகளின் ஓட்டுக்களையும் எப்படியாவது பிரித்து விடலாம், "சைட் கேப்"பில் முதல்வர் வேட்பாளர் என்கிற மவுசு வேறு என்று கணக்குப் போட்டே இந்த முடிவுக்கு விஜயகாந்த் வந்திருக்கலாம்.
செமத்தியான அடிதான்:
வாக்கு வங்கிகள் பிரிந்து கிடக்கும் தமிழ்நாட்டில் விஜயகாந்தின் இந்த முடிவு இரண்டு பெரிய கட்சிகளுக்கும் பலத்த அடிதான். எனினும், அதிமுக தரப்பு தற்போது சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கும்.
அழுகாமல் இருந்தால் சரி:
இத்தனை களேபரங்களிலும் இந்த கூட்டணி உண்மையிலேயே ருசிக்குமா இல்லை தனக்குத்தானே மநகூவுடன் இணைந்து தேமுதிக ஊதிக் கொண்ட சங்கா என்பதை தேர்தல் களம் மட்டுமே தீர்மானிக்கும்...!