தேர்தல் கோதாவில் தேமுதிகவும் குதிப்பு! பிப்.5 முதல் விருப்ப மனுக்கள் தரலாம்- விஜயகாந்த்
சென்னை: 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர் வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் சட்டமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 05.02.2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
14.02.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 10 ஆயிரமும், தமிழ்நாடு சட்டமன்ற தனித் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ. 5 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 5 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற தனித் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ. 2,500ம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் கழகத் தொண்டர்களும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் மாபெரும் வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.