ஜெயலலிதா மறைவு… தமிழக அரசியல் சூழல் குறித்து கருணாநிதி அவசர ஆலோசனை.. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழக அரசியல் சூழல் குறித்து அவசர ஆலோசனை கூட்டம் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா காலமான நிலையில், தமிழக அரசியல் சூழல் குறித்து விவாவிக்க அவசர ஆலோசனைக் கூட்டம், சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 1ம் தேதி, நீர்ச்சத்து குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நலம் முன்னேறியதை அடுத்து நேற்று இரவு வீடு திரும்பினார்.
இதனிடையே, டிசம்பர் 5ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா உடல் நலம் இன்றி மறைந்தார். தமிழகத்தின் ஆளும் கட்சியின் அதிகாரம் மிக்க தலைவரின் மறைவு தமிழக அரசியல் சூழல் நிலையை மாற்றி இருக்கிறது. அதிமுகவின் தலைமை யாரிடம் போகும் என்பது அந்தக் கட்சியின் பிரச்சனை என்று வைத்துக் கொண்டாலும், தமிழக அரசியல் சூழலில் வேறுவிதமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக தமிழ்நாட்டில் அதிமுகவின் மூலம் கால் பதிப்பதற்கான சூழல் ஒன்றும் உருவாகி வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மறுநாளே அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தக் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின், ஆ. ராசா, எ.வ. வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இது ஆலோசனைக்கான கூட்டம் அல்ல என்றும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக நிர்வாகிகள் வீட்டிற்கு வந்துள்ளனர் என்றும் கூறப்பட்டது. என்றாலும் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஏற்பட்டுள்ள தமிழக அரசியல் சூழல் குறித்தே விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.