ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஒக்கே ஒக்க தபால் ஓட்டு: அது யாருக்கு தெரியுமா?
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஒரேயொரு தபால் ஓட்டு பதிவாகியுள்ளது. அந்த ஓட்டு திமுகவுக்கு கிடைத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். இதையடுத்து ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகள் போட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே அதிமுக வேட்பாளர் வளர்மதி தான் முன்னிலையில் உள்ளார்.
அவரையடுத்து இரண்டாவது இடத்தில் திமுக வேட்பாளர் ஆனந்த் உள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஒரேயொரு தபால் ஓட்டு தான் பதிவாகியுள்ளது. அந்த ஓட்டு திமுக வேட்பாளருக்கு கிடைத்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் மட்டும் இடைத்தேர்தல் நியாயமாக நடந்தால் பாஜக சரித்திர சாதனை படைக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியன் மிகவும் பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.