இந்தியை எதிர்க்கவில்லை.. இந்தி திணிப்பையே திமுக எதிர்க்கிறது - ஸ்டாலின்
அனைத்து வகையிலும் இந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர்: இந்தியை எதிர்க்கவில்லை, கட்டாயமாக இந்தி திணிக்கப்படுவதை மட்டும் தான் திமுக எதிர்க்கிறது என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தும், 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரியும் மாவட்டம்தோறும் கருத்தரங்கங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் இம்மாதம் 27-ம் தேதி வரை மாவட்டம்தோறும் கருத்தரங்கங்கள் நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில் வேலூரில் இன்று மாலை முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், அனைத்து வகையிலும் இந்தியை மத்திய அரசு திணித்து வருகிறது. மத்திய அரசு ஆசிரியர் தினத்தை 'குரு உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு பல்கலை கழகங்களில் இந்தியை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. செல்போன் குறுஞ்செய்தி மற்றும் ஏடிஎம் சிலிப்புகளில் இந்தியில் இருக்க உத்தரவிடப் பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது. ஹைகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.