சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து 79 திமுக எம்.எல்.ஏ.க்கள் ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து 79 திமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு மீது திங்களன்று பிற்பகல் விசாரணண நடைபெற உள்ளது.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் குறித்து அதிமுகவின் குணசேகரன் விமர்சித்திருந்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 79 திமுக எம்.எல்.ஏக்களும் 1 வார காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
ஸ்டாலினுக்கு தடை
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நேற்று ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
சபாநாயகர் திட்டவட்டம்
அதே நேரத்தில் 79 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை திரும்பப் பெற முடியாது என்று சபாநாயகர் தனபால் திட்டவட்டமாக நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு சென்றனர்.
போட்டி சட்டசபை
அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட 79 திமுக எம்.எல்.ஏக்களும் சபை வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்துக்கு சபாநாயகராக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் செயல்பட்டார். அரைமணிநேரம் இந்த போட்டி சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
உயர்நீதிமன்றத்தில்...
உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான பெஞ்ச் முன்பாக திமுக எம்.எல்.ஏ.க்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆஜரானார். அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரினார்.
இருப்பினும் இந்த மனு மீது திங்கள்கிழமையன்று பிற்பகல் விசாரணை நடைபெறும் என்று தலைமை நீதிபதி கவுல் தெரிவித்தார்.