கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலையில் மலையேற தடை விதிப்பதா? நீதிமன்றம் போவோம் என திமுக எச்சரிக்கை
சென்னை: கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலையில் மலையேற விதிக்கப்பட்ட தடையை நீக்காவிட்டால் திமுக நீதிமன்றத்துக்கு போகும் என அக்கட்சியின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திருவண்ணாமலையில் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சங்க இலக்கியங்களில் கார்த்திகை தீபம் பற்றி சிறப்பாக பாடப்பட்டுள்ளது. கார்த்திகை தீப வழிபாட்டில் தமிழகத்திலேயே திருவண்ணாமலைக்கு தான் பெரும் சிறப்பு. இந்த தனிச்சிறப்பை இழக்கச் செய்யும் அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது உத்தரவில் மகாதீப திருவிழாவின் போது ஆன்மீக மக்கள் மலைமீது ஏறுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலில் தக்க பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. பக்தர்கள் உரிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை செய்வதில் சிக்கல் இருக்கிறது.
எனவே மகா தீபத்தின்போது மலைமீது ஏற தடை விதிக்கப்படுகிறது என கூறியுள்ளார். அத்துடன் மலை ஏறும் பாதைகளும் மூடப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. இது தவறான ஒன்று.
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காதே, பொங்கலன்று பொங்கல் வைக்காதே என்பது போல் இது உள்ளது. பல நூற்றாண்டு பாரம்பரியமான கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர்களுக்கு தடை விதிப்பது என்பது மக்களின் பண்பாட்டில் அரசின் தலையிடுவது போல் உள்ளது.
அதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மலையேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் இல்லையேல் நீதிமன்றம் சென்று முறையிடுவோம்.
இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.