கருணாநிதி அறிவுரைப்படி மோடி ஆட்சி செய்ய வேண்டும் - திமுக மாணவர் அணி தீர்மானம்!
சென்னை: தி.மு.க. மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை சென்னை, தேனாம்பேட்டை, 'அன்பகம் - அண்ணா அரங்கில்' மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1: நமக்கு நம்மை அறிமுகம் செய்து வைத்தவர், மறுக்கப்பட்ட கல்வியை, வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர வாழ்நாள் முழுவதும் போராடி சமூக நீதியை வென்றெடுத்தவருமான தந்தை பெரியார் பிறந்த நாள், ‘தமிழ்நாடு' என பெயரளித்து, களப்போர் கண்டு, தாய் மொழியாம் தமிழைக் காப்பாற்றிய தமிழுலகம் போற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், சமுதாய அரசியல் சீர்திருத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் இனப்புரட்சி மலராய் மலர்ந்த நாள் ஆகிய இம்மூன்று நாட்களையும் முப்பெரும் விழாவாக கலைஞர் கொண்டாடி வருகிறார்.
வரும் செப்டம்பர் 15 அன்று சென்னையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. நம் கடமையாக முப்பெரும் விழாவில் தி.மு.க. மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்கலந்து கொள்வது மட்டுமல்லாமல், இயக்கக் கொள்கை பாடி, இனப் பகையாளரை அடையாளம் காட்டி, நாட்டை ஆள்பவரின் சீரழிப்புகளை எடுத்துக்கூறும் வண்ணம் மாணவர் அணியின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரங்களை செய்வது என்றும் - கருத்தரங்கம், மாணவர்களே பங்கேற்கும் மக்கள் பிரச்சனைகளை முன்னிருத்தும் வழக்காடு மன்றம், விவாத மேடை, சுழலும் சொற்போர் என நடத்துவது என்றும், வீதிக்கு பத்து மாணவர் என பிரச்சாரக் களத்தில் தொடர்ந்து செயல்படுவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 : பள்ளிகளில் சமஸ்கிருதத்தை திணித்து, எதிர்காலத்தில் இந்தியை கொண்டுவர திட்டமிட்டு, பண்பாட்டு படையெடுப்பை செய்து வரும் மத்திய அரசை கண்டிப்பதுடன்; வழக்கொழிந்து போன, எழுத்துரு இல்லாத "சமஸ்கிருதம் தேவ பாசை; தமிழ் மொழி நீச பாசை" என்று கூறித் திரிவோரை எச்சரிக்கை செய்கிறோம். ஆர்.எஸ்.எஸ். மறைமுகமாகவும், இன்று நேரடியாகவும் செய்து வருகிற வேலைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சமூக நீதிக்கு எதிரானப் பணிகளை தொடர்ந்து செய்வதை பிதமர் மோடி நிறுத்தி, தலைவர் கலைஞர் அவர்கள் கூறிய அறிவுரையேற்று, தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட, விலைவாசியை கட்டுப்படுத்திட முயற்சிகளை செய்வதே மக்களுக்கு ஆற்றும் பணி. தேவையற்ற வேலைகள், அர்த்தமற்ற கருத்துகள் - இவைகளை அடியோடு நீக்கி, தலைவர் கலைஞர் அவர்களின் அறிவுரையேற்று செயல்பட மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3 : கல்லூரி கல்வி இயக்குனர், சென்னை மண்டலம், 27.8.2014 அன்று சென்னை மண்டல அரசுக் கல்லூரிகள், உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரி முதல்வர், செயலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அண்ணல் காந்தியடிகளின் 146வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி நடத்த வேண்டும் என்றும், கல்லூரிக் கல்வி இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் மற்றும் இணைச் செயலாளர் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் எடுத்த முடிவின்படி, "காந்திய வழியில் அம்மாவின் ஆட்சி" என்ற தலைப்பில் நடத்திட அறுவுறுத்தியல்ல, ஆணையாகவே உள்ளது.
ஜெயலலிதா புகழ்பாட உத்தமர் காந்திதானா கிடைத்தார்? ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்; தினசரி காலையில் கோட்டைக்கு வசூல் விபரத்தைச் சொல்ல வேண்டும் என ஜெயலலிதா அரசில் நடத்தப்படும் மதுபான விற்பனை சதவீத உயர்வு என்ற ஜெயலலிதாவின் சாதனைப் பட்டியலை அகிம்சாமூர்த்தி பிறந்த நாளில் அர்ப்பணிப்பார்களா?
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல், விலைவாசியைப் போலவே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாணவிகள் பாலியல் வன்முறைக்கு இரையாகியுள்ளனர். இதுதான் உத்தமர் காந்தி கண்ட கனவா? ஜெயலலிதா ஆட்சியில் இருளில் மூழ்கிடும் தமிழகத்தில் ஆசிரியர், ஆசிரியைகள் போராட்டம் - பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனங்களில் பெரும் பிரச்சனைகள், வழக்குகள் - இந்த சாதனைகள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வருமா? கட்டுரைப் போட்டியில் வருமா?
உத்தமர் காந்தியார் பிறந்த நாளில் அவரை அவமதிக்கும் வண்ணம் ஜெயலலிதாவின் புகழ்பாட கட்டுரை, பேச்சு போட்டிகள் அறிவித்துள்ள தமிழ்நாடு கல்வித்துறையை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.