நீலகிரியில் 11 ரிசார்ட்களுக்கு சீல்.. 48 மணி நேரம் கெடு வைத்தது உச்சநீதிமன்றம்!
11 ரிசார்ட்களுக்கு சீல் வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி: நீலகிரி வனப்பகுதியில் யானைகள் நடமாடும் பகுதியில் கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், தற்போது யானைகள் நடமாடும் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் 11 ரிசார்ட்களையும் உடனடியாக மூட வேண்டும் என்று கூறி 48 மணி நேரம் கெடுவும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.
நீலகிரியில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதிகள்தான். குறிப்பாக சீகூர் காடுகள் என்னும் பள்ளத்தாக்கு பகுதி உள்ளது. இங்குதான் நிறைய அளவில் யானைகள் நடமாடும். அதேபோல கடநாடு, மசினகுடி, உள்ளத்தி, தெப்பக்காடு போன்ற பகுதிகளும் யானைகள் அதிகளவில் நடமாடும் பகுதிகள்தான்.
விடுதிகளுக்கு தடை
இந்த பகுதிகளில் நிறைய கட்டிடங்கள் கட்டப்படுவதாகவும், குறிப்பாக யானைகள் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் கட்டப்படுவதாகவும் புகார் எழுந்தன. இது தொடர்பாக வன உயிரின காப்பக தொண்டு நிறுவனம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றமும், யானை நடமாட்டம் உள்ள பகுதியில் கட்டப்பட்ட விடுதிகளுக்கு தடை விதித்தது.
நீதிபதிகள் உத்தரவு
இந்த தீர்ப்பினை கேட்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து மேல் முறையீட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் யானைகள் நடமாடும் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.
48 மணி நேரம் கெடு
அதன்படி, "யானைகள் நடமாடும் பகுதியில் கட்டப்பட்டுள்ள 11 தங்கும் விடுதி உரிமையாளர்களின் ஆவணங்கள் மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் அந்த ஆவணங்களை ஆட்சியர் ஆய்வு செய்து, சட்டத்துக்கு உட்பட்டு அந்த 11 கட்டிடங்கள் இருந்தால் ஆட்சியரே முடிவெடுக்கலாம். அப்படி இல்லாமல், சட்டத்துக்கு புறம்பாக அந்த 11 கட்டிடங்களும் கட்டப்பட்டு இருந்தால் 48 மணி நேரத்தில் அவைகளை இழுத்து மூடி சீல் வைக்க வேண்டும்.
11 ரிசார்ட்கள் சீல்?
யானைகள் நமது நாட்டின் கவுரவம் தருபவை. அவைகள் நடமாடும் பகுதியில் போய் எப்படி கட்டிடங்களை எழுப்புவது? இந்த 11 தங்கும் விடுதிகளுக்கும் யார் அனுமதி கொடுத்தது? எப்போது இவையெல்லாம் கட்டப்பட்டன? என்பது குறித்த விவரங்களை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்". இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆகவே சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள 11 தங்கும் விடுதிகளும் 48 மணி நேரத்தில் சீல் வைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.