நடைபாதை வியாபாரிகளை அகற்றாவிடில் சட்டம்-ஒழுங்கு காவல்துறையிடம் இல்லை என்றாகிவிடும்: ஹைகோர்ட் சாடல்
சென்னை: நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த முடியவில்லை என்றால் சட்டம்-ஒழுங்கு காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்றாகி விடும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரகு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையில் உள்ள பெரிய ஹோட்டல்களில் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. இதனால் ஹோட்டல்களுக்கு செல்லும் நபர்கள் தங்களது கார்களை சாலைகளில் விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உயர் நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பூக்கடை, என்.எஸ்.சி.போஸ் சாலை பகுதிகளிலும் இதே நிலை தான் உள்ளது. நடைபாதைகளை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, வாகன நிறுத்தம் தொடர்பாக மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஆய்வுகள் செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓட்டல்களில் வாகன நிறுத்தும் வசதிகள் உள்ளன என்றும், இடவசதி இல்லாத இடங்களில், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் வாகனங்களை நிறுத்த பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து காவல்துறையும் கண்காணித்து வருகிறது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஹோட்டல்களில் வாகன நிறுத்துமிடம் சரியாக இருக்க வேண்டும். சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். குறிப்பாக என்.எஸ்.சி. போஸ் சாலையில் வியாபாரிகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை வைக்கின்றனர். இதற்கான மாற்றுவழி குறித்து ஆராய்ந்து ஒருங்கிணைந்த திட்டம் தீட்ட வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டுளோம்.
ஆனால், இது தொடர்பாக அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நடைபாதை வியாபாரிகளை காவல்துறையால் அப்புறப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம்-ஒழுங்கு காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை, காவல்துறை ஒழுங்காக செயல்படவில்லை என்று அர்த்தமாகி விடும். எனவே இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற அக்டோபர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.