தடையை மீறி ஜல்லிக்கட்டு... பாமக ஆதரிக்கும்.. ராமதாஸ் அறிவிப்பு
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் அதனை பாமக ஆதரிக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார்.
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும், இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பொங்கல் நெருங்கிவிட்ட நிலையில், மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வராமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. உச்ச நீதிமன்றமும் ஜல்லிக்கட்டு தொடர்பாக உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டது. இந்நிலையில், ஏற்கனவே பொங்கி எழுந்துள்ள இளைஞர்கள், தங்களது போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தடையை மீறி ஜல்லிக்கட்டை யார் நடத்தினாலும் அதனை பாமக ஆதரிக்கும் என்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் நடத்தும் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டு விஷயத்தில் தன்னெழுச்சியாக உருவாகியுள்ள மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாது என்றும் ஜல்லிக்கட்டு நடக்காமல் இருப்பதற்கு மத்திய அரசே காரணம் என்றும் குற்றம் ராமாஸ் சாட்டியுள்ளார். தமிழக அரசும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.