சென்னையில் 2 அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு... வெறித்தனமாக நடந்த 6 தி.வி.கவினர் கைது
சென்னை: சென்னையில் இரண்டு வயதான அர்ச்சகர்களின் பூணூலை அறுத்து காயப்படுத்திய 6 திராவிடர் விடுதலைக்கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
பெண்களின் தாலியை அகற்றிய திராவிடர் கழகத்தினரின் கறுப்பு சட்டையை அகற்றுவோம் என்று பாஜக எச்சரிக்கை விடுத்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது, கருப்பு சட்டை அணிவது அவர்கள் உரிமை என்றால் தாலி அணிவது இவர்கள் உரிமை.
கருப்பு துணி என்பது துக்க நிகழ்ச்சிக்கு அடையாளமாக அணிவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்க கூடாது என்று பெண்கள் வெகுண்டெழுந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? நம்பிக்கை சார்ந்த விசயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர், சென்னை மைலாப்பூர் மற்றும் மேற்கு மாம்பலத்தில் வயதான அர்ச்சகர்கள் இருவரை தாக்கி பூணூலை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாத குருக்கள். வயது 76. இவர் காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிகிறார். நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் மாதவப் பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் திடீரென இறங்கி அவரைப்பிடித்து கீழே தள்ளினர். அடித்துக் கீழே தள்ளி அவரின் பூணூலையும் அறுத்தனர். இது குறித்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் மேற்கு மாம்பலத்தில் பெருமாள் கோவிலில் பஜனை பாடும் சந்தான கோபாலன் என்ற 69 வயது முதியவரையும் தாக்கி கீழே தள்ளி பூணூலை அறுத்து வீசினர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நந்தகுமார், பிரபாகர், திவாகர், பிரதீப், ராவணன் ஆகிய ஆறுபேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாக பேசித் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.