விடாது கருப்பாய் விரட்டும் அமலாக்கத்துறை - தினகரனை மீண்டும் திஹாருக்கு அனுப்ப திட்டம்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, சம்மன் அனுப்பி விசாரித்து கையோடு கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: இரட்டை இலை லஞ்ச வழக்கில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் தினகரனை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டிடிவி தினகரனை டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள அமலாக்கத்துறையினர் விசாரணை முடிவில் தினகரனை கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினகரன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்தனர். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன் கடந்த 1ஆம் தேதி திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்போது ஜாமீனின் வெளிவந்துள்ள தினகரனிடம் விசாரித்து அவரை கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
டிடிவி தினகரன்
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
திஹார் சிறை
இடைத்தரகர் சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் ஏப்ரல் 26ஆம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். லஞ்ச பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சட்ட விரோத பணபரிமாற்றம்
லஞ்ச பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் மொத்தம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை வழக்கு
ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், டெல்லி அமலாக்கத்துறைக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தினகரன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்மன் அனுப்ப முடிவு
அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தவில்லை. 35 நாட்கள் திஹார் சிறைவாசம் முடிந்து கடந்த 1ஆம் தேதி டிடிவி தினகரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் சென்னை திரும்பி சில நாட்கள் கூட ஆகவில்லை. அப்போது தினகரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கைது செய்ய திட்டம்
சென்னையில் உள்ள தினகரனுக்கு சம்மன் அனுப்பி, டெல்லி வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணை முடிவில் தினகரனை கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடாது கருப்பாய் விரட்டல்
திஹார் சிறையில் இருந்து வெளி வந்த உடனேயே கட்சியில் தீவிரமாக செயல்பட திட்டமிட்டுள்ளார் தினகரன். இந்தநிலையில் விடாது கருப்பாய் விரட்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தினகரனை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சேகர் ரெட்டிக்கு நேர்ந்த கதி
சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மணல் மாஃபியா சேகர் ரெட்டி ஜாமீனில் வெளிவந்ததும், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். அதைப்போலவே டிடிவி.தினகரனையும் கைது செய்து மீண்டும் திஹார் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது.
ஓய்வெடுக்கப் போனேன்
எத்தனை முறை கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பினாலும் டெல்லிக்கு ஏதோ ஓய்வெடுக்கப் போனேன் என்கிற ரீதியிலேயே இருக்கிறது தினகரனின் பேட்டிகள். சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றுள்ள தினகரன் திரும்பினால் தெரியும் எத்தனை நாட்கள் சென்னைவாசம் என்று. எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை அழைத்து கைது செய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் திகிலில் ஆழ்ந்துள்ளனர்.